கிரிக் மருத்துவமனையில் மருத்துவரைப் பகடிவதை செய்த மருத்துவ அதிகாரி கண்டிக்கப்பட்டார்!

- Muthu Kumar
- 07 Dec, 2024
ஈப்போ, டிச. 7-
பேராக்கின் கிரிக் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவரைப் பகடிவதை செய்த மருத்துவ அதிகாரி ஒருவர் கண்டிக்கப்பட்டார் என்று பேராக் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஃபெய்சுல் இட்ஸ்வான் முஸ்தாபா நேற்று தெரிவித்தார்.அந்த விவகாரம் மீது உள்நிலை விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மருத்துவ அதிகாரிக்கு ஜூலை 31ஆம் தேதியன்று கண்டனக் கடிதம் கொடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
பகடிவதைக்கு ஆளான மருத்துவர் ஜூன் 4ஆம் தேதியன்று அது குறித்து புகார் செய்தார். அன்றைய தினமே உள்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஜூன் 12ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவர் கொடுத்த புகாரில் உண்மை உள்ளது என்பது அந்த விசாரணையில் தெரிய வந்தது என்று தமது முகநூல் பக்கத்தில் டாக்டர் ஃபெய்சுல் குறிப்பிட்டுள்ளார்.
உதவி மருத்துவ அதிகாரி ஒருவர் அடித்ததால் தாம் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக அய்டிட் நவாவி கஸாலி எனும் அந்த மருத்துவர் முகநூல் பக்கமொன்றில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, டாக்டர் ஃபெய்சுல் அந்த விளக்கத்தை அளித்தார். சம்பந்தப்பட்ட அந்த மருத்துவ அதிகாரி ஏழு முறை தமது முதுகிலும் இரண்டு முறை தலையின் பின்புறத்திலும் அடித்தார் என்று அய்டிட் நவாவி அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
என்னைத் தாக்கிய மருத்துவ அதிகாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்காக அவர் மன்னிப்பும் கேட்கவில்லை. இன்னும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார். விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதை இது காட்டுகிறது என்றும் அந்த மருத்துவர் கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *