கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை-ஆவேசத்தில் மு.க.ஸ்டாலின்!

- Muthu Kumar
- 26 May, 2025
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் நேற்று நடந்தது. அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி, வரி வருவாய் பங்கு, காவிரி, வைகைக்கு தனித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.
மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தை எதிர்க்கட்சியான அதிமுக, விஜய்யின் தவெக ஆகியோர் விமர்சித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டெல்லி பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லிக்குச் சென்றேன்; தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன். ரெய்டுகளுக்குப் பயந்து - சொந்தக் கட்சிக்காரர்களுக்குக்கூட தெரியாமல் டெல்லி சென்று - கட்சி அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன் என ஊடகங்களிடம் கூறி - பல கார்கள் மாறி - கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.
டெல்லி என்றாலே கிலி பிடித்து அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சியினரின் அடிவயிற்றில் புளியைக் கரைக்க, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டதை இரசித்தபடியே டெல்லி பயணம் அமைந்தது.பகல்ஹாம் தாக்குதலின் போது சென்னையில் பேரணி சென்று ஒற்றுமைக்குரல் எழுப்பினேன்.நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றினேன்.
தமிழ்நாட்டின் நலன் காத்திடவும் - மாநில உரிமைகளை வென்றெடுக்கவும் 2026-க்கு ஆயத்தமாக ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் உங்களைச் சந்திக்க நான் ரெடியாகிவிட்டேன். நீங்கள்? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு சர்வ சிக்ஷ அபியான் திட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காத காரணத்தால் தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என்றும், பள்ளிக்கல்வித்துறைக்கு தேவையான செலவுகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
மேலும், தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி வரி வருவாய் உள்ளிட்டவற்றில் இருந்து வழங்க வேண்டிய வரி பங்கையும் விடுவிக்காததால் பல திட்டங்களுக்கு போதியளவு நிதி ஒதுக்க முடியவில்லை என்றும் தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த இரு கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மு.க.ஸ்டாலின் பேசியதயதாக கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *