கிளந்தான் எம்.பி.யின் பேச்சால் மக்களவையில் அமளி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 3-

பருவமழைக் காலத்தை சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் ஓர் அம்சமாக மாற்ற வேண்டும் என்று கிளந்தான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் பரிந்துரை செய்திருப்பதை பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாகச் சாடியுள்ளார்.அது மிகவும் முட்டாள்தனமான பரிந்துரை என்று தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினரான ஜிம்மி புவா குறிப்பிட்டார்.

கிளந்தான் ஆட்சிக்குழுவில் சுற்றுலாத்துறைக்கு பொறுப்பாக இருப்பவரான கமாருடின் நூரின் அந்த ஆலோசனை, அம்மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் முயற்சியாகும் என்று அவர் தெரிவித்தார்.

பருவமழையினால் ஏற்படும் வெள்ளத்தில் நீர்சறுக்கு போன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தலாம் என்றும் அக்காலகட்டத்திற்கு உகந்த உணவுப்பொருட்களை விளம்பரப்படுத்தலாம் என்றும் கமாருடின் பரிந்துரைத்திருந்தார்."இதுபோன்ற ஆலோசனைகள் மக்களின் மனத்தைக் காயப்படுத்தக்கூடியதாக உள்ளது. இது மிகவும் முட்டாள்தனமான பரிந்துரையாகும்" என்று புவா சொன்னார்.மக்களவையில் பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவ்வேளையில் குறுக்கிட்ட பெரிக்காத்தான் நேஷனலின் பெங்கலான் செப்பா நாடாளுமன்ற உறுப்பினர் அமாட் மார்ஸூக் ஷாரி, தன்னுடைய வார்த்தையை புவா மீட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்நேரத்தில் குறுக்கிட்டுப் பேசிய பக்காத்தான் ஹராப்பானின் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர், முட்டாள்தனம் எனும் வார்த்தைக்குப் பதில் பண்பான வார்த்தையைக் பயன்படுத்தும்படி புவாவைக் கேட்டுக் கொண்டார்.அதனை ஏற்றுக் கொண்ட புவா, முட்டாள்தனம் எனும் வார்த்தைக்குப் பதில் விவேகமற்றது எனும் வார்த்தையைப் பயன்படுத்துவதாகச் சொன்னார். அதன்பின் அமளி முடிவுக்கு வந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *