வெள்ள சாத்தியத்தை எதிர்கொள்ள பினாங்கு தயார்-சௌ கோன் இயோ!

- Muthu Kumar
- 01 Dec, 2024
ஜோர்ஜ்டவுன், டிச. 1 -
பருவமழை பெய்யக் கூடிய மாநிலமாக பினாங்கும் இருப்பதால், அதனால் ஏற்படக் கூடிய சாத்தியமான வெள்ளத்தை எதிர்கொள்ள அம்மாநிலம் தற்போது விழிப்பு நிலையில் இருக்கிறது. அவசியம் ஏற்பட்டால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தயாராக இருக்குமாறு, அவ்வப்போது வெள்ளம் ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை, மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோ நேற்று சனிக்கிழமை கேட்டுக் கொண்டார்.
"வெள்ளம் ஏற்படக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடங்களை நாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருகிறோம். அத்தகைய இடங்களில் வசிப்போர் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால்,அங்கிருந்து வெளியேறுவது தொடர்பான உத்தரவுகளை பின்பற்றவும் தயாராக இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
வெள்ளத் தணிப்புத் திட்டங்களால் வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று கூறிய சௌ, கணிக்க முடியாத கன மழையினால் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியாது என்றும் குறிப்பாக குறுகிய காலத்தில் கன மழை பெய்தால் கால்வாய்களையும் கடந்து வெள்ளம் இதர பகுதிகளில் புகுந்து விடும் என்றார்.
கன மழை மற்றும் பலத்த காற்று வீசியதன் காரணத்தினால், கடந்த செப்டம்பரில் வெள்ளம் ஏற்பட்டபோது, பினாங்கின் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டவர்கள் 11 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *