காப்பார், மேரு குடியிருப்புவாசிகள் வெள்ளத்தால் வெளியேற வேண்டி வரலாம்!

- Muthu Kumar
- 30 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 30-
கனத்த மழை தொடர்வதாலும் கடல் பெருக்கினாலும் மேரு, காப்பார் வட்டாரங்களிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெருவெள்ளம் ஏற்படும் ஆபத்து நிலவுகிறது என்று தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெர்சியாரான் ஹம்சா ஆலாங், ஜாலான் செபாயா, பெக்கான் மேரு ஆகிய பகுதிகளில் இப்போதே வெள்ளம் ஏறத் தொடங்கி விட்டது என்று காப்பார் தீயணைப்பு நிலையத்தின் தலைவர் யாஸ்லி யாஹ்யா குறிப்பிட்டார். வெள்ளத்தின் அளவு உயர்ந்து வருவதற்கும் கடல்பெருக்கு தீவிரமடைவதற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இது கவலையளிக்கக்கூடிய விஷயமாகும் என்று அவர் கூறினார்.
இப்போதைய நிலையில், நீர் மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்துகிறோம். வெள்ளம் தொடர்ந்து மோசமடையுமானால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு சொந்தமாகவே வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர்.
வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அதிகாரிகள் உத்தரவிடும் வரை குடியிருப்புவாசிகள் காத்திருக்கக் கூடாது. நிலைமை அதற்குள் மோசமடையும் சாத்தியம் உள்ளது. ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, திடீரென்று வெள்ளம் ஏறும் சாத்தியம் உள்ளது என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *