நீக்கம்-இடைநீக்கம் செய்யப்பட்ட அம்னோவில் திரும்புவது ஸாஹிட்டுக்கு மிரட்டலாக அமையாது!

- Muthu Kumar
- 07 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 7 -
கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அம்னோ உறுப்பினர்கள் கட்சிக்குத் திரும்புவது, அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியின் தலைமைத்துவத்திற்கு மிரட்டலாக அமையாது என்று, அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.முன்னாள் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் உசேன் மற்றும் இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடின் போன்றவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்புவது நல்லதாகவே இருக்கும் என்று, தேசிய பேராசிரியர்கள் மன்ற உறுப்பினர் அஸ்மி ஹசான் தெரிவித்துள்ளார்.
கட்சியின் விதிமுறைகளை மீறியதற்காக, கடந்த 2023ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து கைரி நீக்கப்பட்ட வேளையில், ஹிஷாமுடின் ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். “அம்னோ உச்சமன்றம் மற்றும் அதன் இதர பிரிவுகளை, துணைப் பிரதமருமான ஸாஹிட் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதால், ஹிஷாமுடினும் கைரியும் மீண்டும் கட்சிக்குத் திரும்பினாலும் ஸாஹிட்டின் தலைமைத்துவம் பாதுகாப்பானதாகவே இருக்கும் என்று அஸ்மி தெரிவித்தார்.
தாமாகவே விருப்பப்பட்டு தலைவர் பதவியிலிருந்து ஸாஹிட் விலகினால் மட்டுமே, அம்னோ தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படும் என்று கூறிய அவர், ஹிஷாமுடினும் கைரியும் கட்சிக்குத் திரும்பினால், அவர்களுக்கு இருக்கும் ஆதரவின் அடிப்படையில் கட்சியை அவர்களால் வலுப்படுத்த முடியும் என்றார்.
"அவர்களை வரவேற்பது என்பது இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்துவிட்டனர் என்பதைக் காட்டும். அம்னோவில் அனைத்தும் நல்ல விதமாகவே நடைபெற்று வருகிறது என்ற உணர்வையும் ஏற்படுத்தும். அம்னோ வலுப்பெறும் என்று, அஸ்மி குறிப்பிட்டார்.கட்சிக்கான தங்களின் நிலைப்பாட்டை ஹிஷாமுடின், கைரி போன்ற இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அல்லது நீக்கப்பட்டவர்கள் நிரூபித்தால் அவர்களை திறந்த மனதுடன் வரவேற்க அம்னோ தயாராக இருக்கிறது என்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸாஹிட் கூறியிருந்தார்.
பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மானுக்கு விதிக்கப்பட்டிருந்த ஆறு ஆண்டு இடைநீக்கம், கடந்த வாரத்தில் தளர்த்தப்பட்டதைக் குறிப்பிட்டு ஷாஹிட் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இந்நிலையில், கட்சியில் ஹிஷாமுடின், கைரியின் ஆதரவு 'கணிசமாக பலவீனமடைந்திருப்பதால்' அவர்களின் வருகை ஸாஹிட்டின் தலைமைத்துவத்திற்கு ஒரு மிரட்டலாக அமையாது என்று மலாயா பல்கலைக் கழகத்தின் அவாங் அஸ்மான் பவி குறிப்பிட்டார்.
இருப்பினும், அம்னோ அதன் அடிமட்ட தலைமைத்துவத்தை மேம்படுத்தவும் கட்சியின் சித்தாந்தத்தை வலுப்படுத்தவும், கட்டமைப்பு சீரமைப்புகளைச் செயல்படுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *