தீயணைப்பு வீரர்களின் ஊதியம், ஊக்கத்தொகை மறுஆய்வு செய்வீர்-எம்பிக்கள் கோரிக்கை!

- Muthu Kumar
- 27 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 27 -
வாரத்தில் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டிய முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும் தீயணைப்பு வீரர்களுக்கான சம்பளத்தையும் ஊக்கத்தொகைகளையும் மறுஆய்வு செய்யுமாறு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.பணியில் ஈடுபட்டிருக்கும்போது கடுமையான வேலை பளுவுக்கு மத்தியில் ஆபத்துகளையும் தீயணைப்பு வீரர்கள் எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதில் மட்டும் ஈடுபடுவதில்லை என்றும் ஆபத்து அவசர மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக அவர்கள் வாரத்தில் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக, பக்காத்தான் ஹராப்பானின் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யாங் ஷெஃபுரா தெரிவித்தார்.கீழ் நிலை போலீஸ்காரர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு 972 வெள்ளி சம்பளம் பெறும் வேளையில், அதே பதவியில் இருக்கும் ஒரு தீயணைப்பு வீரர் அதற்கும் குறைவான சம்பளத்தையே பெறுகிறார் என்று அவர் தெரிவித்தார்.
"பாதுகாப்பு படையினருக்கு' ஈடான ஊதியம் மற்றும் தங்களின் பணிக்கு ஏற்றவாறு ஊதியம் இருப்பதை உறுதிப்படுத்த, தீயணைப்பு வீரர்களுக்கான ஊதியம் மற்றும் அலவன்ஸ் விகிதத்தை மறுஆய்வு செய்வது குறித்து பலிசீலிக்க வேண்டும் என வீடமைப்பு மற்றும் ஊராட்சி மன்றத்துறை அமைச்சரை நான் வலியுறுத்துகிறேன் என்று, மக்களவையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது யாங் தெரிவித்தார்.
தங்களின் பணியின்போது தீயணைப்பு வீரர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் குறித்து எஃப்எம்டி கடந்த சனிக்கிழமை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
குறிப்பாக, பொதுநலப் பிரச்சினைகள் ஓரங்கட்டப்படுவதாக உணரும்போது, தாம் அடிக்கடி மனமுடைந்து போவதாக அஹ்மாட் என்று பெயர் குறிப்பிடப்பட்ட ஒரு தீயணைப்பு வீரர் ஒப்புக் கொண்டார்.மாற்று விடுப்பு ஏதும் இல்லாமல் பொது விடுமுறை நாட்களில் பணி புரிந்ததற்காக தாங்கள் பெற்ற இழப்பீட்டுத் தொகைக்கும் தங்களின் கடினமான பணி தொடர்பான கால அட்டவணைகளுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மையை அவர் சுட்டிக்காட்டினார்.
தீயணைப்பு வீரர்களுக்கான ஊக்குவிப்புத் தொகை மாதம் ஒன்றுக்கு 110 வெள்ளியிலிருந்து 400 வெள்ளி அல்லது 500 வெள்ளிக்கு அதிகரிக்கப்படும் என்று, கடந்த 20 ஆண்டுகளாக தீயணைப்பு வீரராக பணி புரிந்து வரும் அஹ்மாட் எதிர்பார்க்கின்றார்.சிறந்த ஊக்கத்தொகை தொடர்பிலான பரிந்துரைகளை தீயணைப்பு இலாகாவின் மூத்த அதிகாரிகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பொதுச் சேவைத்துறையிடம் சமர்ப்பித்திருந்ததாகக் கூறிய அவர்,இது வரையில் அதன் தொடர்பில் எந்த ஒரு சாதகமான பதிலும் வரவில்லை என்றார்.
தீயணைப்பு வீரர்கள் வீடு, வாழ்க்கைச் செலவினம் மற்றும் பொதுச் சேவை ஊக்குவிப்பு ஆகிய ஊக்கத்தொகையை பெற்று வந்தாலும், அவை இன்னமும் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.இந்நிலையில், தீயணைப்பு வீரர்களுக்கான 110 வெள்ளி மாத ஊக்குவிப்புத் தொகை இனியும் பொருத்தமானதாக இல்லை என்றும் நடப்பு வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப அது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், தேசிய முன்னணியின் லிபாரான் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைமி நசிர் தெரிவித்தார்.
தனது செலவினத்தில் அரசாங்கம் மிக கவனமுடன் இருக்க வேண்டிய வேளையில், 'பாதுகாப்பு படைகளில்' உள்ளவர்களின் நலன்களுக்கான செலவில் அத்தகைய போக்கு இருக்கக் - கூடாது என்று சுஹைமி கேட்டுக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *