ரோஸ்மாவின் விடுதலையை ரத்து செய்யுங்கள் - புரோசிகியூஷன் மேல்முறையீடு!

- Muthu Kumar
- 21 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 21-
பதினேழு கள்ளப் பணப் பரிமாற்ற மற்றும் வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருந்த டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் விடுதலை செய்யப்பட்டிருப்பதை ரத்து செய்யுமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அரசு தரப்பு மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது.
இந்த மேல்முறையீட்டு மனு, நேற்று வெள்ளிக்கிழமை காலையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற பதிவகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் அஹ்மாட் அக்ராம் கரிப் இதை உறுதிப்படுத்தினார்.நீதிபதியினால் வழங்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான தீர்ப்பை உள்ளடக்கி இருக்க வேண்டிய மேல்முறையீட்டு குறிப்புகளை தயார்படுத்துமாறு, இப்போது உயர் நீதிமன்றம் கோரப்படுகிறது.
அதன் பின்னர், சட்டத்திலும் உண்மைகளிலும் நீதிபதி எங்கு தவறு செய்திருக்கின்றார் என்பதை குறிப்பிடுவதற்காக, அரசு தரப்பு வழக்கறிஞர் தரப்பு ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யும்.முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவியான ரோஸ்மாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள், குற்றவியல் சட்ட விதிகளுக்கு ஏற்புடையதாக இல்லாததால்,அவை சட்டவிரோதமானவை மற்றும் குறைபாடுகள் உள்ளவையாகும் என்று, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி தீர்ப்பளித்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ரோஸ்மாவை விடுதலை செய்திருந்தார்.
ரோஸ்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இரட்டைத்தன்மையும் பன்முகத்தன்மையையும் கொண்டவையாக இருப்பதாகவும் முனியாண்டி தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.ரோஸ்மா மீதான கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் குறைபாடுகள் கொண்டவையாக உள்ளன. அஃபின் பேங்க் பெர்ஹாட் வங்கியில் உள்ள தமது கணக்கில் அவர் பணம் வைத்திருந்தார் என்று மட்டுமே அக்குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
வங்கியில் பணம் வைக்கப்பட்டுள்ளது என்பதற்காகவே ஒருவர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் கருத முடியாது என்று. முனியாண்டி அத்தீர்ப்பில் கூறியிருந்தார்.
1967ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் கீழ் ரோஸ்மா மீது கொண்டு வரப்பட்ட ஐந்து வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுகள், காலம் கனிவதற்கு முன்பே மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். வருமான வரி மதிப்பீட்டுக்கு எதிரான ரோஸ்மாவின் மேல்முறையீடு, சிறப்பு வருமான வரி ஆணையர்களிடம் இன்னமும் நிலுவையில் உள்ளது என்பதே இதற்குக் காரணமாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.
எழுபது லட்சத்து தொண்ணூறாயிரம் வெள்ளியைக் கள்ளப் பணப் பரிமாற்றம் செய்ததாக 12 குற்றச்சாட்டுகளையும் உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் தமது வருமானத்தை அறிவிக்கத் தவறியதாக ஐந்து குற்றச்சாட்டுகளையும், 72 வயதான ரோஸ்மா எதிர்நோக்கியிருந்தார்.கடந்தாண்டு ஆகஸ்டு 24ஆம் தேதி தொடங்கிய இதன் தொடர்பிலான நீதிமன்ற விசாரணையில் இரண்டு பேர் சாட்சியமளித்திருந்தனர். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி ரோஸ்மா செய்திருந்த விண்ணப்பம் செப்டம்பர் 6ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அந்த விசாரணை நிறுத்தப்பட்டது.
ரோஸ்மா தாக்கல் செய்துள்ள மற்றொரு மேல்முறையீடும் நிலுவையில் உள்ளது. அது 125 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் வழக்காகும்.சரவாக் மாநிலத்தில் உள்ள கிராமப்புற பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்சாரத் திட்டத்தில் ஊழல் புரிந்ததற்காக, கடந்த 2022ஆம் ஆண்டில் அவருக்கு 10ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 97 கோடி வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து அவர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கின்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *