பூமிபுத்ரா நிறுவனங்கள் அதிகம் முன்னேறுவதைக் காண விரும்புகிறோம்! - அன்வார்
- Shan Siva
- 18 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 18: பூமிபுத்ரா சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (SMEs) முதலீட்டை அதிகரிப்பதும், வேகப்படுத்துவதும் பூமிபுத்ரா அதிகாரமளித்தல் செயல்திட்டத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானது என்று பிரதமர் டத்தோ செரி அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மதானி பொருளாதாரக் கட்டமைப்பிற்கு இணங்க, இந்தச் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான மேலும் விரிவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யும் நோக்கில், வியாழக்கிழமை பூமிபுத்ரா முதலீட்டு நிறுவனங்களுடன் நடத்திய கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபோது, தாம் எடுத்துரைத்த முக்கிய முன்னுரிமைகளில் இதுவும் ஒன்று என அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
அதிக ஆற்றல் கொண்ட நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து, போட்டித்தன்மையுடன் நிலைத்திருக்க, அவற்றுக்கான ஆதரவை வலுப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. அதே நேரத்தில், 2026 முதல் 2027 வரையிலான காலகட்டத்தில் பர்சா மலேசியாவில் 10 புதிய ஆரம்பப் பொதுப் பங்குகளை வெளியிடும் இலக்கை அடைவது உட்பட, மேலும் பல பூமிபுத்ரா நிறுவனங்கள் முன்னேறுவதை நாங்கள் காண விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
நாட்டின் வளர்ச்சி உச்சவரம்பை உயர்த்துவதற்கும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் ஆன முயற்சிகளை மதானி பொருளாதாரம் கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அன்வார் மேலும் கூறினார்.
வளர்ச்சி மேலும் அர்த்தமுள்ளதாகவும், நீடித்ததாகவும், பரவலாகப் பகிரப்படுவதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, தனியார் துறைப் பங்கேற்பும் தொழில்முனைவும் அவசியமானவை என்று அவர் கூறினார்.
"வெறும் சொல்லாடல்களைக் காட்டிலும், உறுதியான செயலாக்கத்தின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்; தற்போதைய கோரிக்கைகள் மற்றும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகள் செயலாக மாற்றப்பட வேண்டும்.
அதன்படி, பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகத்துடன் இணைந்து, முக்கிய முன்னெடுப்புகளை அடையாளம் காணவும் காலாண்டு முன்னேற்ற அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்ந்து கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



