எஸ்பிஎம் தேர்வு இன்று தொடங்குகிறது!

- Muthu Kumar
- 02 Dec, 2024
கோலாலம்பூர்,டிச, 2-
2024ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு திட்டமிட்டபடி இன்று டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கி 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் அறிவித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினர் குறிப்பாக, தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனத்தின் (நட்மா) அறிவுரையை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகஅவர் கூறியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் அனைவரும், தேர்வு அட்டவணைப்படி தேர்வை எழுதுவதற்காகவும் வசதியை உறுதிப்படுத்துவதற் காகவும் மாணவர் தங்கும் விடுதிகளுக்கும் மாற்று தேர்வு மையங்களுக்கும் மாற்றப்பட்டிருக்கின்றனர் என்று, ஃபட்லினா தெரிவித்துள்ளார்.
“வெள்ளத்தில் சிக்கி தங்களின் வீடுகளில் இருந்தவர்கள் உட்பட, அதனால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் நேற்று அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்" என்று கூறிய அவர், கல்வி அமைச்சின் கீழ் இல்லாத கல்விக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதில் அடங்கி இருப்பதாகத் தெரிவித்தார். "கெடாவிலும் திரெங்கானுவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் முதலில் நேற்று வெளியேற்றப்பட்டனர்.
அதற்கடுத்து, வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வரும் கிளந்தானைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். என்று, புத்ராஜெயாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ஃபட்லினா தெரிவித்தார். தேர்வு நடைபெறும் காலகட்டத்தில், தேர்வை எழுதுவதற்கு ஏற்ற ஆடைகளை அணியவும் மாணவர்கள் இம்முறை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாணவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் மாநில கல்வி இலாகாக்கள் செய்து தரும் என்றும் ஃபட்லினா கூறினார்.
கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடாவில் மொத்தம் 5,377 எஸ்பிஎம் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்த ஃபட்லினா கிளந்தானில் மட்டும் 3,111 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.மலாய் வாய்மொழிச் சோதனை டிசம்பர் 2 முதல் 5ஆம் தேதி வரையிலும் ஆங்கில வாய்மொழிச் சோதனை டிசம்பர் 16 முதல் 19ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.
கில கருத்துணர்தல் சோதனை டிசம்பர் 31ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில், அறிவியல் செயல்முறை சோதனை டிசம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரையில் நடைபெறவிருக்கிறது.எஸ்பிஎம் தேர்வை எழுத மொத்தம் 4 லட்சத்து 2 ஆயிரத்து 956 மாணவர்கள் தங்களை பதிந்து கொண்டிருக்கின்றனர்.
இத்தேர்வு சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த, ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 636 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக, கடந்த திங்கள்கிழமை வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது. தேர்வு நேர அட்டவணையை link Ip.moe.gov.my தேர்வு ஆணையத்தின் அகப்பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு எழுதுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுவதுடன், தேர்வு எழுத விருப்போர் தங்களின் அடையாள ஆவணங்களையும் தேர்வுப் பதிவு அறிக்கைகளையும் தேர்வு நடைபெறும் மையங்களில் காண்பிக்க வேண்டும் என்று நினைவுறுத்தப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *