ஆதரவற்ற இல்லத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் வன்செயல்!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர் பாரு, டிச. 16-

கூலாயில் உள்ள ஒரு ஆதரவற்ற இல்லத்தின் பராமரிப்பாளர், 59 வயது ஆண் மீது குற்றச்சாட்டு நேற்று ஜொகூர் பாரு செஷன் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டது. குற்றவாளி, 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 மற்றும் குழந்தைகள் சட்டம் 2001 31(1)(1) இன் கீழ் குழந்தை மீதான வன்செயல் குற்றத்திற்காக குற்றம்சாட்டப்பட்டார்.

குற்றச்சாட்டு நீதிபதி ஹஸீலியா பின்தி முகம்மது முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞராக நூர் ஃபரா வஹிதா பின்தி சஹூ தின் வழக்கை நடத்தினார். குற்றவாளி தரப்புக்கும் தனிப்பட்ட வழக்கறிஞர் இருந்தார்.

நேற்று நீதிமன்ற அமர்வில், குற்றவாளி இரு குற்றச்சாட்டுக்கும் குற்றமற்றவராக தன்னை அறிவித்தார். ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன், நீதிமன்றம் ரி.ம 10 ஆயிரம் நிபந்தனை தொகையுடன் ஜாமீனுக்கு அனுமதி அளித்தது. இந்த வழக்கு மீண்டும் 28 ஜனவரி 2025 அன்று விசாரணைக்கு வருகிறது என்று ஜொகூர் போலீஸ் தலைவர் டத்தோ ம.குமார் நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போலீசின் தகவல்படி, இந்த வழக்கு 29 நவம்பர் 2024 அன்று ஒரு பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை நடந்தது குறித்து புகார் செய்தபோது தொடங்கியது. 8 டிசம்பர் அன்று, அதே இல்லத்தில் குழந்தை மீது வன்செயல் நடந்ததை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, குற்றவாளி 11 டிசம்பர் முதல் 16 டிசம்பர் 2024 வரை போலீசின் காவலில் வைக்கப்பட்டார். குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட ஆதரவற்ற இல்லத்தில் இருந்த குழந்தைகளை மீட்க சமூகப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தக்க சாட்சியங்களைக் கொண்டு போலீசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு ஜொகூர் காவல்துறை மக்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டது.மேலும் தகவல்களுக்கு, ஜொகூர் போலிஸ் ஹாட்லைன் 019-2792095  ஜொகூர் மாநில காவல்துறை தலைமையக நடவடிக்கை அறை தொலைபேசி எண் 07- 2212999 என்பதை தொடர்பு கொள்ளலாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *