துபாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களைக் கொண்டுவரும் முயற்சி தீவிரம்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 16: துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இன்னும் சிக்கித் தவிக்கும் 'பெர்காட் துவா' என்ற கடல்சார் ஆதரவுக் கப்பலின் எஞ்சிய பணியாளர்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது.

விஸ்மா புத்ரா, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மலேசியத் தூதரகம் மற்றும் தொடர்புடைய முகமைகளின் நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் இந்த முயற்சி ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

ஏழு மாதங்களாகத் தனது சக பணியாளர்களுடன் துறைமுகத்தில் சிக்கித் தவித்த பிறகு சமீபத்தில் பாதுகாப்பாகத் திரும்பிய மலேசியப் பணியாளர்களில் ஒருவரான முஹம்மது கமல் இதாமுதீன் கமல் அரிஃபினைச் சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, முஹம்மது கமலும் அவரது சக பணியாளர்களும் இறுதியாகப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். எஞ்சிய பணியாளர்கள் கூடிய விரைவில் திரும்புவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் நலனையும் பாதுகாப்பையும் பேணுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும், இன்னும் சிக்கித் தவிப்பவர்கள் இந்தச் சூழ்நிலையை மன உறுதியுடன் எதிர்கொள்வார்கள் என்றும்  அன்வார்  நம்பிக்கை தெரிவித்தார்.

பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தொடர் தாக்குதல்களும், பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தெஹ்ரான் நடத்திய பதிலடித் தாக்குதல்களும், மேற்கு ஆசியாவின் வான்வெளியின் பெரும்பகுதியை மூட நிர்பந்தித்தன. இதனால், உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மோதல் வெடித்ததிலிருந்து ஈரான், ஈராக், ஜோர்டான், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட குறைந்தது எட்டு நாடுகள் வான்வெளி மூடலை அறிவித்துள்ளன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *