வெங்காய நடவு வெற்றி பெற்றால் வெ.30 கோடியை சேமிக்க முடியும்!

- Muthu Kumar
- 13 Jan, 2025
கோல சிலாங்கூர், ஜன. 13-
நாட்டில் வெங்காயம் பயிரிடும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், அரசாங்கத்தினால் 30 கோடி வெள்ளியை சேமிக்க முடியும் என்று, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாதத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் சாபு தெரிவித்துள்ளார்.
தற்போது, சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள 'ரோஸ்' வகை சிறிய வெங்காயத்தைப் பயிரிடும் திட்டத்தினால், ஒரு சதுர மீட்டருக்கு சுமார் நான்கு டன் வரை அறுவடை செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார். இந்த இலக்கை அடைய, விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு, இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் சிறிய வெங்காயத்தின் விதைகள் விநியோகிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
“பயனீட்டாளர்களின் தேவையைப் பூர்த்தி
செய்வதற்காக, மலேசியா 2021- ஆம் ஆண்டில் 90 கோடியே 25 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 4 லட்சத்து 84 ஆயிரத்து 867 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தது. மலேசியாவிற்கு வெங்காயத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இந்தியாவுக்கு அடுத்து, சீனா 20 விழுக்காட்டையும் பாகிஸ்தான் 11 விழுக்காட்டையும் ஏற்றுமதி செய்கின்றன" என்று முஹமட் சாபு தெரிவித்தார்.
நாட்டில் சிறிய வெங்காய விநியோகத்தில் 30 விழுக்காட்டைப் பூர்த்தி செய்ய முடிந்தால், வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் 30 கோடி ரிங்கிட் சேமிக்கப்படும் என்று சாபு கூறினார். சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம், கோல சிலாங்கூரில் மேற்கொண்டு வரும் சிறிய வெங்காயம் பயிரிடும் திட்டத்தை நேற்று சனிக்கிழமை பார்வையிட்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *