பாஜகவில் இணைந்த ஹர்பஜன் சிங் – வீட்டுச் சுவரில் “துரோகி” என எழுதி எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி ஆதரவாளர்கள்
- Surendran Sumdraraj
- 26 Apr, 2026
ஜலந்தர், ஏப். 26-
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்பஜன் சிங் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவில் இணைந்ததற்கு மறுநாளே, ஜலந்தரில் உள்ள அவரது இல்லத்தின் சுவர்களில் “கதார்” (துரோகி) என்று கருப்பு நிற பேயிண்டால் எழுதப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பல ஆதரவாளர்கள் அவரது இல்லம் முன்பு திரண்டுகொண்டு கோஷங்களை எழுப்பி கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். சிலர் கருப்பு துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டம், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பல முக்கிய எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததையடுத்து அதிகரித்த அரசியல் பதற்றத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
ஹர்பஜன் சிங் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும், சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



