அபரிமிதமான ஆதரவுக்கு நன்றி-நஜிப்!

- Muthu Kumar
- 04 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 4-
தமக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள ஆறு ஆண்டு சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலின் கீழ் கழிக்கும் தமது முயற்சியை ஆதரிக்கும் அம்னோவுக்கு, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தமது நன்றியை தெரிவித்திருக்கின்றார்.
தங்களை ஆதரிப்பதற்காக, வரும் திங்கள்கிழமை புத்ராஜெயாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேரணிக்காக பல அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வரும் கூட்டு முயற்சிகள் குறித்து தமது தந்தையிடம் தாம் தெரிவித்திருப்பதாக, நஜிப்பின் மகன் நஸிஃபுடின் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
பேரணியில் கலந்து கொண்டு தங்களின் தார்மீக ஆதரவை தெரிவிப்பதற்காக, தமது தந்தையின் ஆதரவாளர்களுக்காக பஸ்களும் கார்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதும் அந்த முயற்சிகளில் அடங்கும் என்று நஸிஃபுடின் தெரிவித்துள்ளார்.
“இதில் சம்பந்தப்பட்டிருக்கும் ஒவ்வொருவரின் நேர்மையான முயற்சிகள் குறித்து எனது தந்தையிடம் நான் அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறேன். அவர் மிகவும் நெகிழ்ந்து போனார். அனைவருக்கும் தாம் நன்றி கூறுவதாக தெரிவிக்குமாறு என்னை அவர் கேட்டுக் கொண்டார்.
“இந்த தியாகமானது, ஒரு கட்சி எனும் முறையில் நமது வலிமையையும் நமது விசுவாசத்தையும் பிரதிபலிக்கிறது.இறைவன் அருளால், நமது கூட்டு முயற்சியில் நாம் வெற்றி பெறுவோம்" என்று நஸிஃபுடின் கூறினார்.அப்பேரணியில் மசீச, மஇகா மற்றும் பாஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *