சீனாவில் கனமழை, வெள்ளப்பெருக்கால் பல மாநிலங்களில் 21 பேர் பலி
- Surendran Sumdraraj
- 21 May, 2026
பெய்ஜிங், மே 21-
சீனாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குவாங்சி, ஹுனான், ஹுபேய், குய்ழோ, குவாங்டாங் உள்ளிட்ட பல மாகாணங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் சாலைகள், பாலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குவாங்சி மாகாணத்தில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் நீடித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சீன அரசு அவசர மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ராணுவம், தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுக்கள் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசர நிவாரணமாக 150 மில்லியன் யுவான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



