தற்காப்புத் திட்டம் கொள்ள நாட்டிற்கு உரிமையுண்டு-ஆனால் சினமூட்டக் கூடாது!

- Muthu Kumar
- 27 Nov, 2024
சியோல், நவ. 27-
நாட்டிற்காக தற்காப்புத் திட்டங்களைக் கொண்டிருக்க எந்த ஒரு நாட்டிற்கும் உரிமையுண்டு. ஆனால், சினமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற தமது நிலைப்பாட்டை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்துப் பேசியிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபரில் பாலிஸ்டிக் ஏவுகணையை பாய்ச்சி தென் கொரிய பகுதியில் பாதுகாப்புக்கு மிரட்டலை விடுத்த, வட கொரியாவின் நடவடிக்கையை அன்வார் சாடினார்.
“என்னைப் பொறுத்த வரையில், எந்த ஒரு தற்காப்புத் திட்டத்தையும் கொண்டிருக்க ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு. ஆனால், வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால், சினத்தைத் தூண்டிவிடக் கூடாது என்று அன்வார் தெரிவித்தார்.தென் கொரியாவுக்கான தமது அதிகாரப்பூர்வ பயணத்தின் இறுதி நாளான நேற்று செவ்வாய்க்கிழமை அதன் தலைநகர் சியோலில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அன்வார் இதனைத் தெரிவித்தார்.
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலின் அழைப்பை ஏற்று, அன்வார் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டுக்கான தமது முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.இம்மாதத் தொடக்கத்தில் குறுகிய தூரம் செல்லக் கூடிய பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா பாய்ச்சி இருந்ததாகக் கூறிய தென் கொரிய ராணுவம், வட கொரியா அவ்வாறு செய்திருப்பது இது இரண்டாவது முறை என்று தெரிவித்தது.கண்டங்களுக்கு இடையிலான சோதனை ஏவுகணைகளை கடந்த அக்டோபர் மாத இறுதியில் வட கொரியா பாய்ச்சி இருந்தது. அவை அதிக சக்தி வாய்ந்த மற்றும் திட எரிபொருள் கொண்ட ஏவுகணைகளாகும்.
உக்ரேனுடனான தனது போரில் ரஷியாவுக்கு உதவுவதற்காக தனது ராணுவத்தை ரஷியாவுக்கு வட கொரியா அனுப்பி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது முதல், அது அத்தகைய ஏவுகணைகளை முதன் முதலில் சோதனை செய்திருக்கிறது.தென் கொரிய தீபகற்பத்தின் கிழக்கு நீரிணைப் பகுதிக்கு அருகில் வட கொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை பாய்ச்சி இருந்ததை தாங்கள் அடையாளம் கண்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது.
சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக் கூடிய அந்த ஏவுகணைகளை வட கொரியா பாய்ச்சியது குறித்த தகவல் ஜப்பான் மற்றும் அமெரிக்காவிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் தென் கொரிய ராணுவம் கூறியது.இதனிடையே, கொரிய தீபகற்பத்தை ஒன்றிணைக்கும் அதிபர் சுக் இயோலின் நோக்கத்தை தாம் ஆதரிப்பதாக அன்வார் கூறினார்.
தங்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது தமது நிலைப்பாட்டை வரவேற்ற சுக் இயோலின், அதற்காக தமக்கு நன்றி கூறியதாக அன்வார் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *