1MDB ஊழல் வழக்கில் நஜிப் ரசாக்கை அழைப்பதா இல்லையா என்ற முடிவு இன்று தெரியும் !

- Muthu Kumar
- 30 Oct, 2024
கோலாலம்பூர், அக். 30-
ஐந்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய 1எம்டிபி ஊழல் வழக்கில் எதிர்வாதம் செய்யும்படி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை அழைப்பதா இல்லையா என்பதை உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் இன்று முடிவு செய்வார்.
அரசுத் தரப்பினர் மற்றும் தற்காப்புத் தரப்பினரின் வாய்மொழி வாதப் பிரதிவாதங்கள் ஆகஸ்டு 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 3 ஆம் தேதி வரை பன்னிரண்டு நாட்களுக்கு நடைபெற்ற நிலையில், நஜிப்பின் நிலை இன்று தெரியவரும். அவர் மீதான அரசுத் தரப்பு வழக்கு 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 29ஆம் தேதியிலிருந்து இவ்வாண்டு மே மாதம் 30ஆம் தேதி வரை 235 நாட்களுக்கு நடைபெற்றது.
அதில் மொத்தம் 50பேர் சாட்சியமளித்தனர். முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு எதிரான நான்கு அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்களை அரசுத் தரப்பினர் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றை எதிர்த்து
தற்காப்புவாதம் செய்யும்படி அவருக்கு நீதிபதி இன்று உத்தரவிடலாம் என்று வழக்கறிஞர் ஏ.ஸ்ரீமுருகன் தெரிவித்தார். ஆனால், நஜிப்புக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார் என்று அவர் கூறினார்.
அதிகாரத் துஷ்பிரயோக வழக்கில் முகாந்திரம் இருப்பதை நிரூபிக்க அரசுத் தரப்பினர் தவறிவிட்டனர் என்று நீதிமன்றம் கருதுமானால், நஜிப் மீதான 21 கள்ளப்பணப் பரிமாற்ற குற்றச்சாட்டுகளும் தள்ளுபடி செய்யப்படும் என்றார் ஸ்ரீமுருகன்.இதனிடையே, 1எம்டிபி நிறுவனம் ஊழலில் சிக்கி வீழ்ச்சியடைந்ததற்காக மலேசியர்களிடம் நஜிப் கடந்த வாரம் மன்னிப்புக் கோரியதற்கும் இவ்வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று வழக்கறிஞர் பல்ஜிட் சிங் சித்து விளக்கினார்.
அது வெறும் அரசியல் அறிக்கையாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நீதிபதி தீர்ப்பளிக்க மாட்டார். முற்றிலும் சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே அவர் தீர்ப்பளிப்பார் என்று பல்ஜிட் கூறினார்.கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் 2014ஆம் ஆண்டு டிசம்பருக்கும் இடையில் நஜிப்பின் அம் பேங்க் வங்கிக் கணக்குகளில் 228 கோடி வெள்ளி வரவு வைக்கப்பட்டிருந்தது. அது 1எம்டிபி நிறுவனத்தின் பணம் என்று கூறப்படுகிறது. அதன் தொடர்பில், கள்ளப்பணப் பரிமாற்றம், அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் அவர் மீது 25 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *