கடலுக்கு அடியில் 1300 அடி ஆழத்தில் உலகிலேயே மிக ஆழமான சுரங்கப்பாதை!
- Muthu Kumar
- 12 Dec, 2025
கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் ஆழத்தில், 27 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு சுரங்கப்பாதை திறக்கப்படவுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?அதுதான் நார்வே நாட்டின் பிரம்மாண்டமான ரோக்ஃபாஸ்ட் சப்ஸீ டன்னல் (Rogfast Subsea Tunnel) திட்டம். இது ஒரு சவாலான பொறியியல் திறமைக்கும், மனிதனின் விடாமுயற்சிக்கும் சான்றாக உள்ளது. இந்தச் சுரங்கப்பாதை திறக்கப்பட்டால், இதுதான் உலகிலேயே மிக நீளமான மற்றும் ஆழமான சாலை சுரங்கப்பாதை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கும்.
நார்வேயின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஹில்லெஸ்போ மற்றும் புக்னேஸ் ஆகிய தீவுகளுக்கு இடையேயான பயணத்தை இந்தச் சுரங்கப்பாதை நிரந்தரமாக மாற்றியமைக்கப் போகிறது. தற்போது இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே பயணிக்க கடவுப்பாதை படகுகளை (Ferry) மட்டுமே பயன்படுத்த முடியும். இந்தப் படகுப் பயணம் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை நீடிக்கும். மேலும், வானிலை மாற்றங்கள், படகு தாமதங்கள் எனப் பல சிரமங்கள் உள்ளன.
ஆனால், ரோக்ஃபாஸ்ட் சுரங்கப்பாதை திறக்கப்பட்டதும், இந்தத் தீவுகளுக்கு இடையேயான பயணம் படகில் செல்வதற்குப் பதிலாக, ஆழ்கடலுக்கு அடியில் வெறும் 15 நிமிடங்களுக்குள் காரில் சென்றுவிட முடியும். இது நார்வேயின் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சுற்றுலாவில் ஒரு மாபெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுரங்கப்பாதையின் நீளம் 27 கி.மீ. கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் கீழே. இது ஒரு 130 மாடிக் கட்டிடத்தின் உயரத்திற்குச் சமம். இந்த ஆழமே இந்தத் திட்டத்தை உலகிலேயே மிகவும் சவாலான கட்டுமானப் பணிகளில் ஒன்றாக ஆக்குகிறது.
இந்தத் திட்டத்தில் பொறியியலாளர்கள் எதிர்கொண்ட சில முக்கிய சவால்கள்:
1. 400 மீட்டர் ஆழத்தில், சுரங்கப்பாதையின் சுவர்கள் தாங்க வேண்டிய நீர் அழுத்தம் கற்பனைக்கு எட்டாதது. அதனால், வலிமையான கான்கிரீட் மற்றும் நீர் புகாத தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
2. பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்றிருக்கும் கடினமான கடல் பாறைகளைத் துளையிட்டு, வெடிவைத்து அகற்றுவது என்பது சாதாரண சவாலல்ல. 27 கி.மீ. தூரத்திற்குப் பாறைகளை உடைப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலான பணியாகும்.
3. இது மிக நீண்ட சுரங்கப்பாதை என்பதால், விபத்துகள் ஏற்பட்டால் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற வசதியாக, சுரங்கப்பாதை முழுவதும் பல அவசரகால வெளியேறும் வழிகள் (Emergency Exits) அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், போதுமான காற்றோட்டம் (Ventilation) மற்றும் வெளிச்சத்திற்கான வசதிகள் நவீன தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பிரம்மாண்ட கட்டுமானத் திட்டத்தின் மொத்தச் செலவு, பல பில்லியன் நார்வேஜியன் குரோனர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மலேசிய மதிப்பில் பல ஆயிரம் கோடிக வெள்ளிகளாகும். ஆரம்பத்தில், இந்தத் திட்டம் 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப மற்றும் நிதியியல் சவால்கள் காரணமாக, இதன் இறுதித் திறப்பு தேதி இன்னும் சில வருடங்கள் தாமதமாகலாம்.
ரோக்ஃபாஸ்ட் சுரங்கப்பாதை என்பது நார்வேயின் தனிப்பட்ட திட்டம் மட்டுமல்ல. இது வருங்கால உலகிற்கான ஒரு பாடம். புவியியல் சவால்களை எதிர்கொண்டு மனிதன் எப்படி நகரங்களையும், நாடுகளையும் இணைக்கிறான் என்பதற்கு இது ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



