அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதற்கான அரசின் முயற்சி பாராட்டுக்குரியது-மாமன்னர்!

- Muthu Kumar
- 04 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 4-
உயர் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் தொடர்பான அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியை வரவேற்பதாக சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.மேலும், உள்கட்டமைப்புகளையும் இலக்கவியல் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவது, இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் தற்போதைய தொழில்நுட்பப் பயன்பாடு போன்றவை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்
வலியுறுத்தினார்.
"அரசாங்கச் சேவை முறையும் ஆக்கப்பூர்வமான மற்றும் வெளிப்படையான இலக்கவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட வேண்டும். மக்களின் நிர்வகிப்பில் சிரமத்தை ஏற்படுத்தும், ஊழல், அதிகார மீறல் மற்றும் அரசு நிர்வாக நடைமுறை போன்றவற்றை ஒழிக்க வேண்டும்", என்றும் அவர் கூறினார்.
வளர்ச்சி கண்டு வரும் நாட்டின் பொருளாதார அடைவுநிலையை மேம்படுத்த அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரமும் வர்த்தக அடைவுநிலையும் வளர்ச்சி கண்டிருப்பது குறித்து சுல்தான் இப்ராஹிம் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்தும், மடானி அரசாங்கத்தின் இலக்கிடப்பட்ட உதவித் தொகை அணுகுமுறையை சுல்தான் இப்ராஹிம் வரவேற்றுள்ளார்.எனினும், இலக்கிடப்பட்ட உதவி தொகைகள் ஆக்கப்பூர்வமாக தேவைப்படும் தகுதியுள்ள மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் மாமன்னர் வலியுறுத்தினார்.
"இருப்பினும், இந்த நல்ல அடைவுநிலை, குறிப்பிட்ட குழுவிற்கு மட்டும் லாபத்தை வழங்காமல் மக்களுக்கு வளப்பத்தை அளிப்பதை வேண்டும்", என்று அவர் கேட்டுக் கொண்டார்.சிறு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் தொடர்ந்து உதவிகள் வழங்குவதுடன் விவசாய மூலப்பொருட்கள், உணவு விநியோகத் துறையை வலுப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாமன்னர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
கல்விச் சீர்திருத்தத்திற்கான திட்டங்கள், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சி, இளைஞர்களின் மேம்பாடு ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சிறந்த எதிர்கால தலைமுறையினரை உருவாக்கும் என்று அவர் விளக்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *