அரசாங்க வாக்குறுதி நிறைவேறியது தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி!

top-news
FREE WEBSITE AD

(கு.தேவேந்திரன்)

கோலாலம்பூர், பிப். 16- 
கடந்தாண்டு நடைபெற்ற கோலகுபுபாரு சட்டமன்ற இடைத்தேர்தலின் போது 5 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசாங்கம் வாக்குறுதியளித்தது போல் வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று பெஸ்தாரி ஜெயாவில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்தது தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி என்று பிஎஸ்எம் எனப்படும் மலேசிய சோசலிசக் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அருள்செல்வன் தமிழ் மலரிடம் தெரிவித்தார். 

கோல சிலாங்கூர் உலுசிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள மிஞ்ஞா தோட்டம், மேரி தோட்டம், சுங்கை திங்கி தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம், நைகல் கார்டன் தோட்டம் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்று பல ஆண்டு காலமாக கோரிக்கைகள் வைத்தனர். 


கோரிக்கை வைத்ததோடு, அத்தோட்டங்களை நிர்வகித்து வரும் மேம்பாட்டு நிறுவன அலுவலகங்களிலும் புத்ரா ஜெயாவிலுள்ள வீடமைப்பு. ஊராட்சித் துறை அமைச்சிலும் அமைதி மறியல் நடத்தியதாக அருள்செல்வன் சுட்டிக்காட்டினார். கோலகுபுபாரு சட்டமன்ற இடைத்தேர்தலின் போது தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள்  கட்டித்தர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் அப்போது வைக்கப்பட்டன. 

அதன் தொடர்ச்சியாக மத்திய அரசாங்கம் குறிப்பாக வீடமைப்பு. ஊராட்சித் துறை அமைச்சும் சிலாங்கூர் மாநில அரசாங்கமும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு வீடுகளைக் கட்டித் தர இணக்கம் தெரிவித்தன.நேற்று பெஸ்தாரி ஜெயாவுக்கு வருகைதந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தொடக்கி வைத்தார். 

இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கிடைக்கும் என்று உறுதியாகியுள்ள நிலையில் அவர்களின் 26 ஆண்டு கால வீட்டுரிமைப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. நேற்று அடிக்கல் நாட்டு விழாவின்போது பிரதமரை சந்தித்து தொழிலாளர்களுக்கான வீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அரசாங்கம், வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு, சிலாங்கூர் அரசாங்கம் ஆகியவற்றின் முயற்சிகளுக்கு டத்தோஸ்ரீ அன்வாரிடம் தாம் நன்றி தெரிவித்துக் கொண்டதாக அருள் செல்வன் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *