பெண்ணை மிரட்டிய அமைச்சரின் மகன்-புலன்விசாரணை முடிவடைந்தது!

- Muthu Kumar
- 10 Jan, 2025
கோலாலம்பூர், ஜன.10-
கூட்டரசு அமைச்சர் ஒருவரின் மகன் சம்பந்தப்பட்ட குற்றவியல் மிரட்டல் தொடர்பான விசாரணையைப் போலீசார் முடித்துக் கொண்டுள்ளனர். மேல்நடவடிக்கைக்காக அந்தப் புலன்விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் (டிபிபி) திங்கள்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது என்று தேசியப் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் உசேன் நேற்று தெரிவித்தார்.
ஒரு குற்றச்செயலில் சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினரையும் போலீசார் பாதுகாக்க மாட்டார்கள் என்பதை எங்களின் இந்தப் புலன்விசாரணை நிரூபிக்கிறது. அச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண் ஜனவரி முதல் தேதியன்று போலீசில் புகார் செய்தார். அதன் பிறகு, ஜனவரி 6ஆம் தேதியன்று டிபிபியிடம் புலன்விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது என்றார் ரஸாருடின்.
அப்பெண்ணிடமிருந்து கர்ப்ப ஆய்வு அறிக்கையைப் பெற்றுவருமாறு புலன்விசாரணை அதிகாரிக்கு டிபிபி உத்தரவிட்டார். அப்பெண்ணைத்தான் சம்பந்தப்பட்ட அமைச்சரின் மகன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் மகன் அப்பெண்ணைக் கடந்தாண்டு செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தொடக்க விசாரணையிலிருந்து தெரிய வருகிறது. புலன்விசாரணைக்கு வலுச்சேர்க்கும் நோக்கத்தில் அவர்களின் திருமணச் சான்றிதழையும் போலீசார் உறுதிப்படுத்தவுள்ளனர் என்றும் ரஸாருடின் கூறினார்.
புலன்விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதைப் போலீசார் உறுதிசெய்வார்கள் என்றார்.அமைச்சரின் மகன்தான் தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணம் என்று அப்பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்காக அப்பெண்ணை அந்நபர் மிரட்டியிருக்கிறார். அச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகத்தில் வெளியாகி உள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 24ஆம் தேதியன்று பினாங்கு, பட்டர்வொர்த், தெலுக் ஆயர் தாவாரில் உள்ள வீடொன்றில் பல சாட்சிகளின் முன்னிலையில் அப்பெண்ணுக்கும் அமைச்சரின் மகனுக்கும் இடையே அந்த வாக்குவாதம் நிகழ்ந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *