இந்தோனேசிய அதிபருக்கு விருது வழங்கி கௌரவித்தார் பேரரசர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன. 28-

மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டுள்ள இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோவுக்கு இஸ்தானா நெகாராவில் நேற்று முழுஅரசுமுறை வரவேற்பு நல்கப்பட்டது. மாட்சிமை தங்கிய மலேசியப் பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று பிராபோவோ மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.

நேற்று காலை 10மணிக்கு இஸ்தானா நெகாரா அரண்மனையை வந்தடைந்த அவரை பேரரசர் சுல்தான் இப்ராஹிம் வரவேற்றார்.பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபடிலா யூசோப் ஆகியோரும் அச்சடங்கில் பங்கேற்றனர்.

இஸ்தானா நெகாரா பேரணி சதுக்கத்தில் அரச மலேசிய ரெஜிமண்ட்டின் மத்திய இசைக்குழுவினரின் இருநாட்டு தேசியப் பண்களின் முழக்கத்துடன் வரவேற்புச்
சடங்கு தொடங்கியது. அதன் பின், அரச பீரங்கிப் படையின் 41ஆவது பட்டாளப் பிரிவின் வீரர்கள் 21 வேட்டு முழக்க மரியாதை செய்தனர்.

மேஜர் அஸாம் முகமது தலைமையில் அரச மலாய் ரெஜிமண்டின் முதலாவது படைப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும் 103 வீரர்களும் நல்கிய மரியாதை அணிவகுப்பை பிராபோவோ பார்வையிட்டார்.வரவேற்புச் சடங்கு முடிவுற்றவுடன் டேவான் ஸ்ரீ மகாராஜா மண்டபத்தில் பேரரசரைச் சந்திக்க அவர் சென்றார். அங்கு "டர்ஜா கெராபாட் ஜொகூர் யாங் அமாட் டிஹோர்மாத்தி எனும் ஜொகூரின் முதன்மை அரச விருதை பிராபோவோவுக்கு பேரரசர் வழங்கி கௌரவித்தார்.

கடந்தாண்டு அக்டோபர் 20ஆம் தேதியன்று இந்தோனேசியக் குடியரசின் அதிபராக பிராபோவோ பதவியேற்ற பின்னர், மலேசியாவுக்கு அவர் மேற்கொண்டுள்ள முதல் அரசுமுறை பயணம் இதுவாகும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *