தனியார் துறைகள் முழுமையாக ஈடுபட்டால் எச்.எஸ்.ஆர் திட்டம் தொடரப்படலாம்!

top-news
FREE WEBSITE AD

புத்ரஜெயா, ஜன. 8-

அரசாங்கத்தின் ஈடுபாடு மிகக் குறைவான அளவில் இருந்து, தனியார் துறைகள் முழு அளவில் ஈடுபடுமேயானால், கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதி விரைவு ரயில் திட்டத்தை உயிர்ப்பிக்கலாம் என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கச் செலவின ஒதுக்கீட்டுக்கு ஒரு எல்லை இருப்பதோடு, இத்திட்டம் தொடர்பான ஒரு சாத்தியமான பரிந்துரைக்காக அரசாங்கம் இன்னமும் காத்திருக்கிறது.

இதன் காரணத்தினால், இத்திட்டத்தில் தனியார் துறைகளின் பங்கேற்பை வரவேற்க அரசாங்கம் எண்ணம் கொண்டிருப்பதாக, நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார். "குறைந்தது இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு, ஏழ்மை ஒழிப்பு முயற்சி, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், அடிப்படை வசதி விவகாரங்கள், கல்வி மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகியவற்றுக்கு நாங்கள் (அரசாங்கம்) முன்னுரிமை வழங்க வேண்டியிருக்கிறது.

"ஆதலால், பின்தங்கியிருக்கும் இத்தகைய விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டியிருப்பதன் காரணத்தினால், இந்த மிகப் பெரிய திட்டத்தை அவசியம் ஒத்தி வைக்க வேண்டியிருக்கிறது" என்று அன்வார் கூறினார்.“தேவைப்படும்போது (இத்திட்டத்தைத்) தொடர்வதற்காக தனியார் துறைகளிடமிருந்து சாத்தியமான மற்றும் சாதகமான பங்கேற்புக்காக நாங்கள் இன்னமும் காத்திருக்கின்றோம்.

"பல பரிந்துரைகள் கைவசமிருக்கின்றன. பணிக்குழு அவற்றை ஆராய்ந்தும் வருகிறது" என்று, புத்ராஜெயாவில் நேற்று செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் கூட்டாகச் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் அன்வார் தெரிவித்தார்.

மலேசியாவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை லாரன்ஸ் கோலாலம்பூர் வந்திருந்தார்.இந்நிலையில், கோலாலம்பூர்- சிங்கப்பூர் எச்எஸ்ஆர் திட்டத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பில் மலேசியாவிடமிருந்து வரும் எந்த ஒரு புதிய பரிந்துரையையும் சிங்கப்பூர் அரசாங்கம் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் என்று வோங் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *