இதைவிட்டால் வேறு வழியில்லை; மலாய் முஸ்லிம்கள் ஒன்றிணைவோம்! - பாஸ் கட்சி அழைப்பு
- Shan Siva
- 04 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 4: வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் பாஸ் மற்றும் அம்னோ கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது செயலிழந்துவிட்ட முவாஃபாகத் நேஷனல் கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்க இதுவே சரியான நேரம் என்றும் அவர் விவரித்துள்ளார்.
நாட்டின் இரண்டு பெரிய மலாய்-முஸ்லிம் கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்பு தேவை என்றும், இந்த மாநிலத் தேர்தல்கள் ஒரு புதிய அரசியல் மறுசீரமைப்பிற்கு வழிவகுக்கும் என்றும் துவான் இப்ராஹிம் கூறினார்.
வரவிருக்கும் மாநிலத் தேர்தலை, மலாய்-முஸ்லிம் அரசியல் பலத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் முழுவதும் பூமிபுத்ராக்களின் அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக இது அமையும் என்று அவர் விவரித்தார்.
நாட்டின் முக்கிய மலாய்-முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து மற்றும் சகிப்புத்தன்மை இருந்தால் மட்டுமே இவை அனைத்தையும் அடைய முடியும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
மலாய்-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டும் முயற்சிகள், ஜொகூர் தேர்தலில் தொடங்கி, துரிதப்படுத்தப்பட வேண்டும். முவாஃபாகத் நேஷனல் 2.0-ஐ நனவாக்குவதற்கான நேரம் இதுவே என அவர் தெரிவித்தார்.
அனைத்து முக்கிய கட்சிகளும், குறிப்பாக மலாய் அடிப்படையிலான கட்சிகளும், தங்களின் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சமூகத்தின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிப்பதை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று பாஸ் கட்சி நம்புவதாக துவான் இப்ராஹிம் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



