மாமன்னரின் உத்தரவை பெர்சத்து மதிக்கவில்லை-ஆளுங்கட்சி எம்பிக்கள் சாடல்!

- Muthu Kumar
- 10 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 10 -
வரும் 2027ஆம் ஆண்டில்தான் நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அப்போதுதான் நடப்பு அரசாங்கத்தின் ஐந்தாண்டுத் தவணைக் காலம் நிறைவடையவும் இருக்கிறது.
இத்தகைய நிலையில், இவ்வாண்டில் திடீர் பொதுத் தேர்தல் நடைபெறக் கூடும் என்ற தனது பேச்சைத் தொடரும் பெர்சத்துக் கட்சியின் போக்கை, நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாகச் சாடியிருக்கின்றனர்.
திடீர் பொதுத் தேர்தல் குறித்துச் சமூக வலைத் தளங்களில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை, பெர்சத்துத் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலி வெளியிட்டிருந்த அறிக்கை பொறுப்பற்றது என்று அவர்கள் கோபமடைந்தனர்.மாட்சிமை தங்கிய மலேசியப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் கடந்த ஆண்டில் தமது உத்தரவு மூலம் தடை விதித்திருந்த, அரசியல் நிலைத்தன்மைக்கு மருட்டல் விடும் நோக்கத்தில் அஸ்மினின் அறிக்கை இருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
ஒற்றுமை அரசாங்கம் உருவாக்கப்பட்டிருப்பதை மதிக்க வேண்டும் என்றும் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையைச் சீர்குலைக்க முயற்சிக்கும் அரசியல் கட்சிகளின் எந்தவொரு கோரிக்கையையும் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி வெளியிட்ட தமது உத்தரவில் பேரரசர் வலியுறுத்திக் கூறியிருந்தார்.பேரரசரின் உத்தரவை பெர்சத்துக் கட்சி மதிக்கவில்லை என்றும் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக இருந்து தனது பங்கை ஆற்ற அக்கட்சி மறந்து விட்டது என்றும், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் குற்றஞ்சாட்டினார்.
"மூலதனத்தையும் கவனத்தையும் அக்கட்சியினர் தொலைத்து விட்டனர். ஆதலினால், நிலைத்தன்மையற்ற ஒரு சூழலை எப்படி உருவாக்குவது என்பது பற்றி அவர்கள் நாள் தோறும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்' என்று எஃப் எம்டியிடம் ராயர் தெரிவித்தார்.
இவ்வாண்டு இறுதியில் திடீர் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இருப்பதாகக் கூறி, கட்சியின் தேர்தல் கேந்திரத்தை இப்போதே தயார்படுத்துமாறு, பெர்சத்துக் கட்சித் தலைவர் முஹிடின் யாசின் கட்சிக்கு உத்தரவிட்டிருப்பதாக ஒரு முகநூல் பதிவில் அஸ்மின் குறிப்பிட்டிருந்தார்.
வெள்ளிக்கிழமை நடந்த பெர்சத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றின்போது முஹிடின் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்ததாகவும் கடந்த புதன்கிழமை பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையில் ஒரு கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, பெர்சத்துக் கூட்டத்தில் "மிகவும் ஊக்கமளிக்கும் முன்னேற்றங்கள்' குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அஸ்மின் அதில் தெரிவித்திருந்தார்.
2027ஆம் ஆண்டில், நடப்பு அரசாங்கத்தின் தவணைக் காலம் முடிவடைவதற்கு முன்னரே, திடீர் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதால், பெர்சத்து அதற்குத் தயாராக வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பரில் அஸ்மின் கூறியிருந்தார்.ஐந்து அரசியல் கட்சிக் கூட்டணிகளுக்கிடையில், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ஐந்தாண்டு முழுத் தவணைக் காலம் வரையில் ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமைத்துவம் வலிமையுடன் இருக்கும் என்று, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்), தேசிய முன்னணி (தேமு). காபுங்ஙான் பார்ட்டி சரவாக் (ஜிபிஎஸ்), காபுங்ஙான் பார்ட்டி சபா (ஜிஆர்எஸ்) மற்றும் வாரிசான் ஆகியவைவே அந்த ஐந்து கூட்டணிக் கட்சிகளாகும். இதனிடையே, அன்வார் தலைமையிலான அரசாங்கம் நிலையாகவும் உறுதியுடனும் இருப்பதால், இவ்வாண்டு இறுதியில் திடீர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று. பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜொஹான் தெரிவித்தார்.
"நாடு மற்றும் மக்கள் மீது கவனம் செலுத்துவதே சிறந்தது.எப்போதும் தேர்தல் பற்றியே பேசிக் கொண்டிருக்காதீர்கள். இத்தகைய வெற்றுப் பேச்சுகள் நன்மையைக் கொண்டு வராது. பெர்சத்து மற்றும் பெரிக்காத்தான் நேஷனலுக்கு நான் தெரிவிக்கும் அறிவுரை இதுதான்" என்று, ஜசெகவைச் சேர்ந்தவருமான ஷாரெட்ஸான் கூறினார்.பெர்சத்துவின் இத்தகையப் பிரச்சாரங்கள் குறித்துக் கேள்வி எழுப்பிய, தேசிய முன்னணியைச் சேர்ந்த கினாபாத்தாங்ஙான் நாடாளுமன்ற உறுப்பினர் புங் மொக்தார், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு வழி விடுவதற்காக, நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுமாறு பிரதமர் விண்ணப்பித்த பின்னரே, பேரரசர் அதற்கு அனுமதி அளிப்பார் என்றார்.
'அவ்வாறு செய்யுமாறு பேரரசரைக் கேட்டுக் கொள்ளும் அதிகாரம் அரசாங்கத்தை வழி நடத்திக் கொண்டிருப்பவருக்கு மட்டும்தான் இருப்பதால், பெர்சத்துவின் அறிக்கை தம்மைக் குழப்பமடையச் செய்திருக்கிறது. “இதில் பெர்சத்துவின் அறிக்கை முரண்பாடாக இருக்கிறது. இதை "அரசியல் தூண்டுதல் என்று கூறலாம் என புங் கூறினார்.பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியத்திற்கு நியாயமான காரணங்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருப்பதால், அஸ்மினின் அறிக்கை வலுவற்ற ஒன்றாக இருப்பதாக, அமானா கட்சியைச் சேர்ந்த ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசோப் வருணித்தார்.
"பிரதமர் சொன்னால் அது சரியானதாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும். தற்போது பெர்சத்து கட்சி மிகவும் பலவீனமாக இருப்பதாக நான் கருதுகிறேன். செயலற்று தூங்கிக் கொண்டிருக்கும் கட்சிக் கேந்திரத்தை எழுப்புவதற்காக பெர்சத்து இவ்வாறு செயல்படக் கூடும்" என்று அவர் கூறினார்.கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவு விவகாரத்தைத் திசை திருப்புவதற்காக பெர்சத்துக் கட்சி வேண்டுமென்றே இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் என்று. பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுவனேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *