முகமது சாபு பதவி விலகவேண்டுமா?
- Muthu Kumar
- 24 Jan, 2025
கோலாலம்பூர், . 24-
தலைநகர் கோலாலம்பூரில் நாளை சனிக்கிழமையன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு அரசாங்கம் தடை விதிக்குமானால் விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமது சாபு விலகத் தயாரா என்று சட்டத்துறையின் முன்னாள் துணையமைச்சர் ஹனிபா மைடின் சவால் விடுத்திருந்தார். அந்த சவால் அபத்தமானது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி பதிலடி கொடுத்துள்ளார்.
முகமது சாபுவை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகக்கோரும் ஹனிபாவின் கோரிக்கை பொருத்தமற்ற ஒன்று அவர் சுட்டிக்காட்டினார். தற்போது பதவியில் இல்லாத ஒருவர் இதுபோன்ற சவாலை விடுப்பது பழைய பாணி அரசியலாகும் என்று தமது முகநூல் பக்கத்தில் புவாட் சாடியுள்ளார்.
கடந்த காலத்தில் முகமது சாபு பல எதிர்ப்புப் பேரணிகளை நடத்தினார். அதற்காக நீதிமன்றத்தில் அவரைத் தாம் பலமுறை தற்காத்திருப்பதாக ஹனிபா இப்போது கூறிவருகிறார். சிப்பாங் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அவரின் இந்த வாதம் அபத்தமாக உள்ளது. குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு சாத்தியம் கொண்ட அனுமதிபெறாத இடங்களில் பேரணிகளை நடத்த வேண்டும் என்று ஹனிபா வலியுறுத்துகிறாரா என்று புவாட் வினவினார்.
பேரணிகளை நடத்த புத்ராஜெயா தடை விதிக்கக்கூடாது. பேரணிகளை அனுமதிப்பது ஒற்றுமை அரசாங்கத்தின் நற்பெயருக்கு மேலும் வலுவூட்டுவதாக இருக்கும் என்றும் ஹனிபா கூறியிருந்தார். கோலாலம்பூரின் சோகோ விற்பனையகத்திற்கு வெளியே பேரணி நடத்துவதற்கு முன்அனுமதி பெறவேண்டும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். ஆனால், அதற்கு பேரணி ஏற்பாட்டாளரான "ஹிம்புனான் ரக்யாட் பெஞ்சி ரசுவா எனும் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் ஸாயிட் மாலிக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
லஞ்சஊழலுக்கு எதிராகப் போராடிவருவதாக பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் ஊழல் எதிர்ப்புப் பேரணி நடத்தப்படுவதைக் கண்டு அச்சப்படுவது ஏன் என அவர் வினவினார். ஸாயிட் மாலிக், 'சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள் எனும் அமைப்பின் இயக்குநரும் ஆவார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



