இடைக்காட்டு சித்தர் (இடைக்காடர்)

top-news
FREE WEBSITE AD


இடைக்காட்டுச் சித்தர் என்பவர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காட்டுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு  முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் , இடையர் ,கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்திப் பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார். 

புராணம்
நவக்கிரகங்களில் குருவைத் தவிர அனைவரும் பதறிப் போனார்கள். நாம் சரியான இடத்தில் தானே நேற்றிரவு படுத்திருந்தோம், இன்று இடம் மாறியிருக்கிறோம். எப்படி இது நிகழ்ந்தது? நமது மாறுபாட்டான நிலையால், கொடும் பஞ்சம் சம்பவிக்க வேண்டிய ஒரு மாமாங்க காலத்தின் நடுப்பகுதியிலேயே, மழை கொட்டிக் கொண்டிருக்கிறதே! இனி நாம் முந்தைய நிலையை அடைந்தாலும், மழை நிற்குமா? என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.குரு சிரித்தார். கிரகங்களே! நீங்கள் பேசுவது நகைப்புக்குரியதாய் இருக்கிறது. நாம் ஒருமுறை இடம் மாறி விட்டால், குறிப்பிட்ட காலம் வரை அதே இடத்தில் தான் சஞ்சரிக்க முடியும் என்ற விதியைக் கூட மறந்து விட்டீர்களா? விதியை மதியால் வெல்லலாம் என்பது இதுதான்! இந்த விளையாட்டுக்கு காரணமானவர் யார் தெரியுமா? இடைக்காடர்... ஆம்... நேற்று வரை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அவர், இன்று மாபெரும் சித்தர். சிவனருள் பெற்றவர். அவரது மதி பலம் மட்டுமல்ல... நமக்கெல்லாம் படியளக்கும் சிவபெருமான் மீது அவர் கொண்டிருக்கும் பக்தியும் இதற் கொரு காரணம், என்றதும், ஆ... என வாயைப் பிளந்த கிரகங்கள், ஆடு மேய்த் தவர் சித்தரானது எப்படி? குருதேவா! எங்களுக்கு விளக்கியருள வேண்டும்? என்றனர். குரு இடைக்காடரின் வரலாறை விவரித்தார். இடைக்காடர், காஞ்சிபுரம் அருகிலுள்ள இடையன் மேட்டைச் சேர்ந்தவர் என்று ஒரு சாராரும், சிவகங்கை அருகிலுள்ள இடைக்காட்டூரைச் சேர்ந்தவர் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். எப்படியிருப்பினும், ஊரின் பெயரே இவருக்கு நிலைத்திருக்கிறது. இவரது தந்தை நந்தக்கோனார், தாய் யசோதா. இந்தப் பெயர் களைக் கொண்டு, இவரைப்பெருமாளின் ஒரு அம்சம் என்று கூறுபவர்களும் உண்டு.

கண்ணன் பசுக்களை மேய்த்தார், இவரோ ஆடுகளை மேய்த்தார். கல்வியறிவு அறவே இல்லை. இந்த ஆடுகள் அங்குமிங்கும் பாய்கின்றனவே! தனக்கு வரும் ஆபத்தை உணராமல் குறுக்கும் நெடுக்குமாக ஓடி, முன்னால் செல்ல துடிக்கின்றனவே! இவற்றின் மந்தபுத்தியால், இவை தனக்கும், பிறருக்கும் சிரமத்தைத் தருகின்றனவே! ஓ...ஆண்டவனே! இந்த ஆடுகளின் ஸ்பாவத்தைப் போலவே தானே, உன்னைப் போன்ற மனிதர் களின் ஸ்பாவமும் இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறாயோ! மனிதன் கடவுளுக்கு பயப்படவா செய்கிறான்? ஆடுகளைப் போல குறுக்கு வழியில் முன்னேறத்தானே நினைக்கிறான்! இந்த ஆடுகளை நான் நல்வழிப்படுத்தி, அவரவர் வீட்டில் ஒப்படைப்பது போல, மனித ஜீவன்களையும் ஒழுங்குபடுத்தி, உன்னிடம் ஒப்படைக்கத்தான் எனக்கு இந்தப் பிறவியைத் தந்துள்ளாயோ! படிப்பில்லாவிட்டாலும் கூட, இடைக்காடரின் மனதில் ஆழ்ந்த ஞானத்தைத் தரும் இந்தக் கேள்வி எழும்பியதும், இதற்கு விடை தேடி அலைந்தார். ஆடுகளை ஓரிடத்தில் மேயவிட்டு, கோலை ஊன்றி, ஒற்றைக்காலை உயர்த்தி, தவ நிலையில் இருப்பார். சிவபெருமானே! என் கேள்விக்கு விடை வேண்டும், இந்த சமூகத்தை நான் ஒழுங்குபடுத்த வேண்டும். கல்வி எனக்கில்லை, யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அது அவசியமும் இல்லை. எனக்கு, மனித வாழ்வின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளும் சக்தியைக் கொடு, இந்த சமுதாயத்தை ஒழுங்குபடுத்தும் உபாயத்தைச் சொல்,.... இப்படி அன்றையப் பொழுது முழுவதும் பல மாதங்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள், அவர் முன்னால் அதிபயங்கர மின்னல் போன்ற பிரகாசமான ஒளி வீசியது. அது இடைக்காடரின் உடலில் பாய்ந்தது. இடைக் காடருக்கு ஏதோ தனக்குள் மாற்றம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது அசரீரி ஒலித்தது. சேவை... சேவை... சேவை... இதுவே மனிதன் என்னை அடைவதற்கான வழி...பிறருக்கு சேவை செய். அதற்குரிய உபாயத்தைக் காண். மகனே! இதோ, ஞானநூல்கள் அனைத்தையும் கற்ற பெருமைக்குரியவர்களின் வரிசையில் உன்னையும் சேர்க்கிறேன்.

நீ இன்று முதல் பெரிய மகான். சாதாரண இடைக்காடன் அல்ல... இடைக்காட்டு சித்தன்... இடைக்காட்டு சித்தன்... ஒலி நின்றுவிட்டது. சிவனருளால் இடைக்காடர் இப்படி சகல ஞானமும் பெற்றதும், அவரால் நினைத்ததை எல்லாம் செய்ய முடிந்தது. ஒருமுறை அவர் தியானத்தில் இருந்த போது, கொடிய பஞ்சம் வரப்போவதை அறிந்தார். அந்த பஞ்சம் 12 ஆண்டுகள் நீடிக்கும் என்பதைக் கணித்தார்.ஆஹா...நதிகள் வற்றப்போகின்றன. ஊற்று தோண்டினால் கூட தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் இல்லாவிட்டால் உலகமேது. இந்தப் பஞ்சத்தால் பல உயிர்கள் அழிவது உறுதியாகி விட்டது. நானும் அதில் ஒருவனாகத்தானே இருப்பேன்! ஒருவேளை நான் உயிர் பிழைத்தேன் என்றால், ஏதாவது செய்து இந்த மக்களுக்கு நல்வழி பிறக்கச் செய்யலாம். இறைவனின் கட்டளையை மாற்ற என்னால் முடியாது. ஆனாலும், மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும் கஷ்டம் வரும் நேரத்தில் தானே சேவை செய்யச் சொல்லி இறைவன் நமக்கு கட்டளையிட்டிருக்கிறான். அந்த சேவையைச் செய்ய எனக்கு உயிர் தேவை... இந்த சிந்தனையுடன், அவரது மூளை வேகமாக வேலை செய்தது. தன் ஆடுகளுக்கு எருக்க இலைகளை பறித்துப் போட்டார். கேழ்வரகு (கேப்பை) எனப்படும் தானியத்தை மண்ணுடன் சேர்த்து குழைத்து, ஒரு குடிசை கட்டினார். ஊர்மக்கள் இவரது செய்கையை வித்தியாசமாகப் பார்த்தனர். இடைக்காடனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. எவனாவது விஷத் தன்மையுள்ள எருக்க இலைகளை ஆடுகளுக்கு பறித்துப் போடுவானா? மேலும், கேழ்வரகைக் குழைத்து வீடு கட்டுவானா? என்று பேசிக் கொண்டாலும், இடைக்காடர் ஏன் இப்படி செய்கிறார் என்ற சந்தேகமும் ஏற்பட்டது. தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள, அவர்கள் இடைக் காடரிடம் விளக்கம் கேட்டனர். கொடிய பஞ்சம் வரப்போகிறது. பஞ்சகாலத்தில், பச்சிலைகளுக்கு எங்கே போவது? எனவே, ஆடுகளுக்கு கடும் கோடையிலும் காயாத எருக்க இலைகளை சாப்பிட பழக்குகிறேன், என்றதும், ஊரே சிரித்தது. 

மக்கள் தன் பேச்சை நம்பாவிட்டாலும் ஏளனமும் செய்கிறார்களே... ஐயோ! இவர்களையும் பஞ்சத்தில் இருந்து காப்பாற்றலாம் என நினைத்தால், இவர்கள் தன்னை நம்பாமல் இருக்கும் போது என்ன செய்ய முடியும்? அவர்களின் விதி அவ்வளவு தான் என்று நொந்து கொண்டார் இடைக்காடர். என்ன ஆச்சரியம்! அவர் சொன்னது போலவே, சில மாதங்களில் வறட்சி துவங்கியது. கொஞ்சநாள் இப்படி இருக்கும்... அப்புறம் சரியாய் போய்விடும் என மக்கள் நினைத்தனர். உஹூம்... மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லை. ஒரு வருடம், இரண்டு வருடம் என காலம் நீடித்தது. பயிர் பச்சைகள் அழிந்தன. ஒரு சாரார் பட்டினியால் மடிந்தனர். கால்நடைகள் மெலிந்து நூலாகி விட்டன. இடைக்காடர் வளர்த்த ஆடுகள் மட்டும் எருக்க இலையைச் சாப்பிட பழகியிருந்ததால், உயிர் பிழைத்துக் கொண்டன. ஆனால், அந்த இலையைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட அரிப்பு தாங்காமல், இடைக்காடர் கேழ்வரகைக் குழைத்துக் கட்டிய குடிசையில் உரசின. அப்போது, கேழ்வரகு கீழே சிந்தியது. அதைக் கொண்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டுக் கொண்டார் இடைக்காடர். தண்ணீர் பற்றாக்குறை இருந்ததால், தான் குடியிருந்த இடத்தின் அருகில் இருந்த ஆற்றில், ஒரு ஆழமான பகுதியில் ஊற்று தோண்டி வைத்துக் கொண்டார். கிடைக்கிற தண்ணீரைச் சிக்கனமாக வைத்துக் கொண்டார். இந்த சமயத்தில், வானுலகில் இருந்து நவக்கிரகங்கள் பூலோகத்தில் தாங்கள் ஏற்படுத்திய வறட்சி நிலை சரியாக இருக்கிறதா? மக்கள் எந்தளவுக்கு சிரமப்படுகிறார்கள்? பாவம் செய்த மக்களுக்கு, சரியான தண்டனை வழங்கும்படி, இறைவன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு தாங்கள் செய்த செயல்கள் ஒழுங் காக நடைபெறுகின்றனவா? என்று ஆய்வு செய்தனர். ஓரிடத்தில் இடைக்காடர் திவ்யமாக கேப்பைக்கூழ் காய்ச்சுவது கண்டும், ஆடுகள் எவ்வித சிரமமும் இல்லாமல் உலாவுவது கண்டும் ஆச்சரியப்பட்ட அவர்கள், கிரகச் சூழ்நிலைகளை சமயோசிதத்தால் வெற்றி கொண்ட சித்தருக்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு அவரது குடிசைக்கு வந்தனர்.

அவர்களை வரவேற்றார் இடைக்காடர். அவர்களைக் கண்டதுமே, ஐந்தாறு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் பஞ்சம், இன்னும் ஆறு ஆண்டுகள் தொடர்ந்தால் என்னாகும்? பூலோக வாழ்வே ஸ்தம்பித்துப் போகுமே! இருக்கிற மக்களையாவது காப்பாற்றியாக வேண்டுமே! அவர் மூளை வேகமாக வேலை செய்தது. கிரகங்களே! நீங்கள் அனைவரும் இன்றிரவு என் குடிசையில் தங்க வேண்டும். இதுவே நீங்கள் என் மீது கொண்ட அன்பின் அடையாளத்தை வெளிக்காட்டுவதாக அமையும், என்றார் இடைக்காடர்.சித்தரை மீறிச் சென்றால், அவரை அவமதித்தது போலாகும். மேலும், அடியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், இறைவனின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும் என பயந்த கிரகங்கள், அதற்கு சம்மதித்தனர். இடைக்காடர் அவர்களுக்கு ஆட்டுப்பாலும், கேப்பைக் கூழும் தந்தார். அவற்றைப் பருகிய கிரகங்கள், உண்ட மயக்கத்தில் களைத்து படுத்து விட்டனர். நள்ளிரவில் அயர்ந்து உறங்கிய அவர்களை, தன் சக்தியால் எழ விடாமல் செய்த இடைக்காடர், அவர்களை தூக்கி, மழை பெய்வதற்கு எந்த கிரகநிலை இருந்தால் சரியாக இருக்குமோ, அதற்கேற்ப படுக்க வைத்து விட்டார். அவ்வளவு தான்! மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. காலையில் எழுந்த கிரகங்கள், அனல்காற்றுக்கு பதிலாக குளிர்க்காற்று வீசுவதையும், விடிய விடிய பெய்த பெரும் மழையில், ஆற்றில் தண்ணீர் பெருகி ஓடுவதையும் கண்டனர். தங்களை மாற்றி வைத்தது இடைக்காடராகத்தான் இருக்கும் என நம்பிய அவர்கள் அவரைத் தேடினர். அவரோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இவரை இப்போதைக்கு எழுப்ப முடியாது என உணர்ந்து கொண்ட நவக்கிரகங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி விட்டனர்.இந்த சம்பவத்தை அறிந்த மக்கள், இடைக்காடரை நோக்கி வந்தனர். தங்களைக் காப்பாற்றியமைக்காக நன்றி கூறினர். இடைக்காடர் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.முன்பொரு முறை தன்னை நம்பாத மக்கள், இப்போது நம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இவர்கள் நேரத்திற்கு நேரம் தங்கள் நடைமுறையையும், பேச்சையும் மாற்றுபவர்களாக அல்லவா இருக்கிறார்கள்? என்று எண்ணியே வருத்தப்பட்டார்.

இருப்பினும் அவர் மக்களுக்காக இறுதிவரை சேவையே செய்தார். ஒருமுறை, மதுரை வந்த இடைக்காடர், அன்றைய மன்னன் குலசேகரப் பாண்டியனைச் சந்தித்தார். இவரது ஏழ்மையான தோற்றம் கண்ட மன்னன். இவரைக் கண்டுகொள்ளவே இல்லை.நாடாளும் மன்னன் ஏழைகளை அவமதிக்கிறான். ஏ சுந்தரேசா! நீ இவ்வளவு பெரிய கோயிலில் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாயா? என்று இறைவனைக் கடிந்து கொண்டார்.அதுகேட்டு மீனாட்சியம்மன் கோயிலில் இருந்த சுந்தரேஸ்வரர், அவருடன் கிளம்பி விட்டார். அவர்கள் கோயிலில் இருந்து சற்று தள்ளியுள்ள சிம்மக்கல் என்ற இடத்தில் தங்கினர். தற்போது அவ்விடத்திலுள்ள ஆதிசொக்கநாதர் கோயிலில் இடைக்காடருக்கும் சன்னதி இருக்கிறது. பின்னர் மன்னன் மன்னிப்பு கேட்டு, சுந்தரேஸ் வரரை மீண்டும் கோயிலுக்கு அழைத்து வந்தானாம்.இவர் திருவண்ணாமலைக்கும் சென்றிருக்கிறார். அங்கு கிரிவலம் வந்த அவர், கோடி யுகங்களுக்கு முன்புள்ள கார்த்திகை தீபக்காட்சிகளைக் கூட தரிசித்தார். இவர் இங்கு வந்த பிறகு தான் அண்ணாமலையில் வசித்த மான்களும், சிங்கங்களும் அங்கிருந்த தடாகங்களில் ஒன்றாகத் தண்ணீர் குடித்ததாம். இப்படி மக்களின் பஞ்சம் போக்க தன்னையே ஈந்த இடைக்காடர், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரிலேயே சமாதியானார். ஒருசாரார், அவர் திருவிடைமருதூரில் (தஞ்சாவூர் மாவட்டம்) சமாதியானதாகவும், திருவண்ணாமலையில் சமாதியடைந்ததாகவும், ஜனன சாகரத்தில் சமாதியடைந்தாரென்றும் சொல்கிறார்கள்.

நவக்கிரக நாயகன் இடைக்காட்டூர் சித்தர்: சித்தர்கள் என்பவர் சிவத்தை கண்டவர்கள் சுத்த, அசுத்த மாயைகளால் தீண்டப் பட்டாலும், எதனாலும் கரைபடாமல் முக்தி அடைந்தவர்கள் எனப் போற்றப்பட்டனர்.

சித்தர்கள் யார் ?: அகத்திய மகரிஷியின் கூற்றுப்படி சித்தன் என்பவன், மூலமதை யறிந்தக்கால் யோகமச்சு முறைமையுடன் கண்டக்கால் வாத மச்சு சாலமுடன் கண்டவர் முன் வசியமாய் நிற்பார் சாத்திரத்தைச் சுட்டெரித்தால் அவனே சித்தன்.

நூல் - அகத்தியர் பரிபாஷை: தமிழ்நாட்டில் வாழ்ந்த பல கோடி சித்தர்களில் பதினெட்டு சித்தர்கள் மிக முக்கியமாக போற்றப்படுகின்றனர். அதில் இடைக்காட்டுச் சித்தர் மிகக் குறிப்பிடத்தக்கவர். ஏனென்றால் அவர் அகத்திய மகரிஷியை மகா சித்தர் என்றும் பெரும் சித்தர் என்றும் அவருடைய குரு போக மகரிஷியால் அழைக்கப்பட்டார். ஏனெனில் ஏனைய சித்தர்கள் கலியுகத்தில் மனிதன் படும் துன்பங்கள் நீங்க வழிகளை அறிந்து அதற்குரிய 
வழிமுறைகளை கூறினார்கள் ஆனால் இடைக்காட்டூர் சித்தர் மட்டும் உலக ஜீவன்கள் அனைத்தும் உய்ய வழிமுறைகள் கண்டறிந்து உபாயம் கூறினார்.


 :- லட்சுமி சுப்பிரமணியம்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *