18ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங்!

- Muthu Kumar
- 07 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 7-
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, 18ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த மாநாடு நாளை 8ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் நடைபெறுகிறது.
உலகளாவிய ரீதியில் இந்திய தலைவர்களும் அறிஞர்களும் ஒன்று கூடும் இந்த மாநாட்டை ஒவ்வொரு வருடமும் இந்தியா ஏற்று நடத்துகிறது. உலகெங்கும் பரவிக் கிடக்கும் இந்தியர்களை இந்த மாநாடு ஒன்றிணைப்பதோடு இந்திய அரசாங்கத்தோடு இணக்கத்தை ஏற்படுத்துகிறது.
நம் நாட்டில் இலக்கவியல் அமைச்சு புதிதான ஓர் அமைச்சானாலும், இந்தியாவோடு இலக்கவியல் துறை சார்ந்த முன்னெடுப்புகளில் மலேசியா கைகோர்க்க, தாம் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாகத் தெரிவித்தார்.இலக்கவியல் அமைச்சரின் இந்தப் பயணம் மலேசியா-இந்தியா டிஜிட்டல் கவுன்சில் அமைப்பை (MIDC) வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வழி இருதரப்பு இலக்கவியல் (டிஜிட்டல்) வர்த்தகம், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆற்றலை அதிகரிக்கும்.
அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னோடி நாடுகளில் ஒன்று. தற்போது நமது நாடு தென்கிழக்காசியாவின்
இலக்கவியல் மேம்பாட்டு மையமாக உருவாகியிருக்கும் நிலையில், பல நாட்டு தொழில்நுட்ப ஜாம்பவான்கள் நமது நாட்டில் தொடர்ச்சியாக முதலீடு செய்ய முனைகின்றன. இது வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதோடு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
இது தனது 2ஆவது அதிகாரப்பூர்வ பயணமாகும். கடந்த வருடம், பிரதமர் அன்வார் இப்ராஹிமோடு அதிகாரப்பூர்வபயணம் மேற்கொண்டபோது, மலேசியா-இந்தியாவுக்கு இடையேயான உடன்பாட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது, இந்தியாவின் பெரும் தொழில் நுட்ப நிறுவனங்களையும் இலக்கவியல் துறைசார் வல்லுநர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
அதன் தொடர்ச்சியாக, இந்த மாநாட்டுப் பயணத்தின் போது, நம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் நலனையும் கருத்தில் கொண்டு இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை, கோபிந்த் சிங் சந்திப்பார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *