தீயணைப்புக் கருவி பராமரிப்புச் சேவையில் மோசடி;10 பேர் கைது!

- Muthu Kumar
- 09 Jan, 2025
பாகான் டத்தோ, ஜன.8-
வர்த்தகத் தலங்களை இலக்காய்க் கொண்டு தீயணைப்புக் கருவி பராமரிப்புச் சேவை மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீஸ் முறியடித்தது. பாகான் டத்தோ மற்றும் தலைநகர், செராஸ் ஆகியவற்றில் கடந்த 1 தொடங்கி 5ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட 4 சோதனை நடவடிக்கைகளில் 21 முதல் 35 வயதிற்குட்பட்ட 1 பெண் உட்பட 10 பேரைக் கைது செய்ததில் இக்கும்பலின் செயல் அம்பலமானதாக பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டிசிபி ஸுல்கிப்ளி சரியாட் தெரிவித்தார்.
இவர்களைக் கைது செய்ததில் பாகான் டத்தோ மற்றும் கம்பார் பகுதிகளில் புகார் செய்யப்பட்ட வெ.89,000 இழப்பை உட்படுத்திய 6 சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளது.ஆகக் கடைசியாகக் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி பிற்பகல் 3.40 மணிக்கு ஊத்தான் மெலிந்தாங்கைச் சேர்ந்த ஓர் ஆடவரிடமிருந்து கிடைத்தப் புகாரின்படி 2 ஆடவர்கள் 1 தீயணைப்புக் கருவி பராமரிப்புச் சேவையை வெ.100க்கு மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டினார்.இருந்த போதிலும் ஊத்தான் மெலிந்தாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் அத்தலத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைப்படி அத்தீயணைப்புக் கருவியில் இருக்கும் தீயை அணைக்கும் கருவி ஆய்வு அமைப்புக்கான (இஎஃப்இஐஎஸ்) ஸ்டீக்கர் போலி என்பதோடு பதிவில் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதே சமயம் மேற்கொண்ட சரிபார்ப்பின்படி தீயணைப்புக் கருவி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்புத் துறை அந்நிறுவனத்தைப் பதிவு செய்யவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 89 தீயணைப்புக் கருவிகள், கைப்பேசிகள் (4), இஎஃப்இஐஎஸ் ஸ்டீக்கர்கள் (7), கார்கள் (3), போலி குத்தகையாளர் சான்றிதழ் (2) ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் 420ஆவது குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக ஓர் அறிக்கையில் டிசிபி ஸுல்கிப்ளி சரியாட் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *