பினாங்கு மாநகரசபையின் கூட்டத்தில் பொதுப் பிரச்சினைகள் குறித்து விவாதம்!

- Muthu Kumar
- 29 Nov, 2024
(ஆர்.ரமணி)
பினாங்கு, நவ. 29-
பினாங்கு மாநகரசபையின் நிர்வாகக் குழு கூட்டத்தில், மாநிலத்தில் பொது மக்கள் நலன் பேணும் பற்பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அவற்றுள் மாநகர் மன்ற உறுப்பினர்கள் சிலர் பரிந்துரைத்த சில திட்டங்கள் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான காலக் கெடுவும் விதிக்கப்பட்டன.
பினாங்கு மாநகரசபைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் டத்தோ ஏ.ராஜேந்திரனின் தலைமையுரைக்குப் பின்னர் அவை தொடங்கியபோது, மாநிலத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் இரவுச் சந்தை,வாராந்திரச் சந்தை மற்றும் உழவர் சந்தை ஆகியவற்றில் தலைதூக்கும் சில பிரச்சினைகளை மாநகர் மன்ற உறுப்பினர்கள் சிலர் முன் வைத்தனர்.
குறிப்பாக அத்தகைய இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் போதுமான அளவுக்கு இல்லையென்ற குறைபாடு, மக்களிடையே எழுவதாகக் கூறப்பட்ட வேளையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், குறிப்பிட்ட சில நெரிசலான பகுதிகளில் இப்பிரச்சினையை தவிர்ப்பதற்கில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் சில சந்தை வணிகர்கள், தத்தம் வணிகப் பொருள் கழிவுகளை அவ்விடத்திலேயே விட்டுச் செல்வதும், முறையான வகையில் குப்பைத் தொட்டிகளுடன் அவற்றை அப்புறப்படுத்தும் நற்செயலை பின்பற்றத் தவறுவதும் ஆங்காங்கே நடப்பது தொடர்பிலும் இக்கூட் டத்தில், விவாதிக்கப்பட்டு அவற்றுக்குசுமுகத் தீர்வு காண்பதற்கும் நல்லிணக்கம் காணப்பட்டது.அதே வேளையில் உணவு வணிகர்கள், உணவுத் தயாரிப்புக்கு முன்னரும், வாடிக்கையாளர்களுக்கு பரிமாறிய பின்னர் மீதமுறும் கழிவுகளை, தம் தொழிலிடங்களின் சாக்கடைகளில் கொட்டி விட்டுச் செல்வது தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டு, அத்தகைய தரப்பினரை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மாநிலத்தில் மாநகரசபையின் அங்கீகாரம் பெற்ற,வாகன நிறுத்துமிடங்களுக்கான கட்டண விதிப்பு, நீண்ட காலத்திற்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டு,அவற்றுக்கு சற்று கூடுதலான நிர்ணயம் காணப்பட்டது. அவ்வண்ணம் அரைமணி நேர நிறுத்தி வைப்பு 40 காசிலிருந்து 60 காசாகவும்,ஒரு மணிநேர நிறுத்தி வைப்பு,80 காசிலிருந்து 1 ரிங்கிட் 20 காசு என்றஅடிப்படையில், மக்களுக்கு சுமையற்ற வகையில் குறைவான விகிதமாக அவையில் அறிவிக்கப்பட்டது.மாநில ரீதியாக பல்வேறு பகுதிகளில் மறுசுழற்சி பயனீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு சுமுகமான முறையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக இங்கு மாசுகட்டுப்பாட்டு நிலைமை பேணப்பட்டிருக்கும் நிலையில்,சுற்றுச் சூழல் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *