சபா முதல்வராகும் வாய்ப்பு கிட்டிங்கானுக்கு கிடைக்காது-ஆய்வாளர்கள் கருத்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 21-

சபா மாநிலத்தின் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு ஜெப்ரி கிட்டிங்கானுக்கு கிடைக்கலாம் எனக் கூறப்படுவதை அரசியல் ஆய்வாளர்கள் நிராகரித்துள்ளனர். மாநில சட்டமன்றத்தில் கிட்டிங்கானின் ஸ்டார் கட்சிக்கு குறைவான இடங்கள் இருப்பதே இதற்கு காரணமாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சபா சட்டமன்றத்தில் மொத்தம் 79 இடங்கள் உள்ளன. அதில் ஸ்டார் கட்சிக்கு ஆறு இடங்கள் மட்டுமே உள்ளன. அம்மாநிலத்தின் சிறு கட்சிகளில் அதுவும் ஒன்றாகும். எனவே, மாநில அரசுக்குத் தலைமையேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைப்பது சாத்தியம் அல்ல என்று தாஸ்மானியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஜேம்ஸ் சின் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகத்தான், பார்ட்டி பெர்சத்து சபா (பிபிஎஸ்) கட்சியுடன் இணைந்து கொள்ள ஸ்டார் முயன்று வருகிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.அவ்விரு சுதேசி கட்சிகளும் இணையும் சாத்தியம் குறித்து இம்மாத முற்பகுதியிலிருந்து பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த சாத்தியம் குறித்து விவாதிப்பதற்கு சிறப்புக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

சபா சட்டமன்றத்தில் பிபிஎஸ் கட்சிக்கு ஏழு இடங்கள் உள்ளன.ஆளும் சபா ஜிஆர்எஸ் கூட்டணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் குறிப்பாக முதல்வர் ஹஜிஜி நூரின் தலைமையிலான பார்ட்டி காகாசான் ரக்யாட் சபா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் வலுவான ஆதரவைப் பெற்றால் மட்டுமே கிட்டிங்கானால் முதல்வர் பதவிக்கு வரமுடியும் என்று சபா மலேசியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பில்ச்சர் பாலா குறிப்பிட்டார்.

ஜிஆர்எஸ் கூட்டணியின் வசமுள்ள 42 இடங்களில் 26 இடங்கள் காகாசான் ரக்யாட் கட்சிக்குச் சொந்தமானதாகும். சுரங்கத்தொழில் ஊழலில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதால், ஜஜிஜியைப் பதவி விலகுமாறும் சபா அம்னோ கோரிக்கை விடுத்துள்ளது. அவருக்குப் பதில் கிட்டிங்கானை அப்பதவிக்கு நியமிக்கும்படியும் அது பரிந்துரைத்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *