பாப்பா ராய்டுவுக்கு ஐந்து தோட்ட மக்கள் போலீஸ் புகார்.

- Muthu Kumar
- 19 Dec, 2024
கோலகுபுபாரு, டிச. 19-
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டுவுக்கு எதிராக 5 தோட்ட மக்கள் போலீஸ் புகார் செய்துள்ளனர். நேற்று கோலகுபுபாரு போலீஸ் நிலையத்தில் இந்தப் புகாரைச் செய்த பொதுமக்கள், தோட்டத் தொழிலாளர்கள் அமைத்த குழுவுக்கு எதிராக மாற்றுக்குழுவை அமைத்து பாப்பா ராய்டு செயல்படுவதாக அந்த போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் பத்தாங் பெர்ஜுந்தை வட்டாரத்தைச் சேர்ந்த மேரி தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம், நைகல் கார்டினர் தோட்டம், சுங்கை திங்கி தோட்டம், மிஞ்ஞா தோட்டம் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுசேர்ந்து புகார் செய்துள்ளனர்.
மேற்கண்ட தோட்டங்களைச் சேர்ந்த மக்கள், அவர்களைப் பிரதிநிதித்து குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குழுவை அங்கீகரிக்க மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு மறுத்து வருவதாக குழுவின் 5 தோட்டங்களின் நடவடிக்கைக் குழு பொறுப்பாளரான ஜலாலுடின் கூறினார்.
தோட்டத்து பிரதிநிதிகள் சார்பில் அனுப்பப்படும் முறையீட்டுக் கடிதங்களை பாப்பா ராய்டு அலட்சியம் செய்கிறார்.
தோட்ட பிரதிநிதி நடவடிக்கைக் குழுவைப் புறக்கணித்து, தன் கட்சியைச் சேர்ந்த சிலரை நியமித்திருப்பது என்ன நியாயம் என்று ஜலாலுடின் கேள்வி எழுப்பினார்.
தோட்ட மக்களுக்கு ஆதரவாக பிஎஸ்எம் எனப்படும் மலேசிய சோசலிஷ கட்சி துணை நிற்பதாக ஜலாலுடின் கூறினார்.இதனிடையே பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தோட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவிருக்கும் வீடுகளைக் கட்டுவதில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் முயன்று வருவதாக அவர் சாடினார்.
தோட்ட மக்கள் சில தரப்பினரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பாப்பா ராய்டு, மக்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களில் தலையிட்டு அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *