இடும்பன் காவடி தூக்கும் போது ஏன் வாயை மூடிக் கொள்கிறார்கள்
- Tamil Malar (Reporter)
- 01 Feb, 2026
ஆக்கம்: லட்சுமி சுப்ரமணியம்
இடும்பன் காவடி தூக்கி வரும்போது வாயை மூடி (பெரும்பாலும் வாயில் வேல் அல்லது தடி குத்தி) செல்வது, பக்தி, அகம் மற்றும் புறத் தூய்மை, மற்றும் கட்டுப்பாட்டின் அடையாளமாகும். இது பேசாமல் மனதை முழுமையாக முருகனிடம் குவித்து, கடுமையான தவம் மூலம் வேண்டிக்கொள்ளும் ஒரு நேர்த்திக்கடன் வழிபாடாகும், இது இடும்பனின் பக்தி வரலாற்றையும் குறிக்கிறது.
இடும்பன் முருகனிடம் சரணடைந்த கதையின் அடிப்படையில், பேசுவதைத் தவிர்த்து மனதை முருகனின் நினைப்பில் மட்டுமே இருத்துவதற்காக வாய் மூடப்படுகிறது.அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவர் இடும்பன். ஒருமுறை அகஸ்தியர் இடும்பனை அழைத்து, முருகன் வழிபாட்டிற்காக கைலாயம் சென்று அங்குள்ள கந்த மலையில் உள்ள சிவகிரி, சக்தி கிரி ஆகிய இரண்டு சிகரங்களை இங்கே கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
அகஸ்தியரின் கட்டளைப்படி இடும்பனும் கயிலை சென்று சிவசக்தியை வணங்கி அங்கிருந்த இரு மலைகளை இருபுறமும் தொங்கவிட்டபடி காவடியாக கட்டி எடுத்து வந்தார்.
முருகனின் திருவிளையாடல் :
இடும்பனுக்கு அருள் புரியும் பொருட்டும், திருவாவினன்குடியில் அந்த இரு மலைகளை நிலைப்பெறச் செய்யும் பொருட்டு திருவிளையாடல் நிகழ்த்தினார்.
கயிலாயத்திலிருந்து திரும்பிய இடும்பனுக்கு வழிதெரியாமல் திகைத்தார். அப்போது அவர் முன் தோன்றிய முருகன் குதிரையில் பயணம் செய்யும் அரசன் போல இடும்பனுக்கு வழிகாட்டி திருவாவினன்குடிக்கு அழைத்து சென்றார்.
இங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லுமாறு கூறினார். அதனால் அங்கேயே இடும்பனும் தான் காவடியாக தூக்கி வந்த மலைகளை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் புறப்படத் தயாரானார். அப்போது அந்த மலைகளை தூக்க முடியாமல் தவித்தார். அப்போது சிவகிரி மேலே ஒரு சிறுவன் கோவணத்துடன் தன் கையில் தண்டுடன் நிற்பதைப் பார்த்தார். உடனே சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். மலையிலிருந்து இறங்க மறுத்த அந்த சிறுவன் இந்த மலை எனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினார். இதனால் கோபமடைந்த இடும்பன் சிறுவனை தாக்க முயன்றார். ஆனால் முருகனின் சக்தியால் வேரற்ற மரம் போல விழுந்தான்.
இதைக் கண்ட அகஸ்தியர், இடும்பனின் மனைவியை அழைத்துச் சென்று முருகனை வழிபட்டு, இடும்பனை விடுவிக்கும் படி வேண்டினார்.
முருகனும் தான் நினைத்தபடி, இடும்பனுக்கு அருளாசி புரிந்தார். அதோடு இடும்பனைத் தன் காவல் தெய்வமாக நியமித்தார். என்னை வணங்கும் முன் உன்னை வணங்கி மலையேற வேண்டும். உன்னை வணங்கினால் என்னை வணங்கிய அருள் கிடைக்கும் என்றும் கூறினார்.
இடும்பனுக்கு அருள் புரிந்த முருகன், இனி இடும்பனைப் போல காவடி சுமந்து சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேக பொருட்களை காவடி ஏந்தி என் சன்னதிக்கு வந்து வழிபட்டால், தான் நல்லருள் வழங்குவதாக வாக்களித்தார்.
அன்று முதல் முருக பக்தர்கள் முருகனுக்கு பல்வேறு காவடிகளை எடுத்தும், பால் குடம் எடுத்தும் வழிபட்டு வருகின்றனர்.
இடும்பன் மலை
இப்படி முருகனுக்கு முதலில் காவடி சுமந்த இடும்பனை தன் காவல் தெய்வமாக நியமித்ததோடு, பழநி மலைக்கு இடதுபக்கம் அமைந்துள்ள மலை இடும்பன் மலை என்ற பெயரில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இடும்பன் முருகப்பெருமானை வணங்கும் பொருட்டும் அமைந்துள்ளார். இடும்பனுக்கு வேறெங்கும் தனி கோயில் கிடையாது. இடும்பனுக்கு உள்ள பெரிய தனி கோயில் இது.
கந்தசஷ்டி கவசத்தில் "இடும்பாயுதனே இடும்பா போற்றி' என்ற வரியும் இடும்பனை சிறப்பிக்கும் வகையில் உள்ளது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



