நாட்டின் அமைதியும் செழிப்பும் நீதியான கொள்கைகளால் மட்டுமே நிலைத்திருக்கும் - பிரதமர்
- Tamil Malar (Reporter)
- 14 Dec, 2025
பெட்டாலிங் ஜெயா, டிச. 14-
மலேசியாவின் அமைதியும் செழிப்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதியான கொள்கைகளால் ஆதரிக்கப்படும் போதே நிலைத்திருக்கும் என்றும், வெறுப்பு, தீவிரவாதத்திற்கு இடம் அளிக்கக்கூடாது என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
இவ்வாறு அவர் பெட்டாலிங் ஜெயாவில் மலேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு (CFM) ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது கூறினார். மேலும் பிரதமர் அக்கூட்டமைப்புக்கு 2 லட்சம் வெள்ளி நிதியை அறிவிப்பு செய்தார்.
"பல்வேறு வேறுபாடுகள், சிக்கல்கள் இருந்த போதிலும், மலேசியா அமைதியான, செழிப்பான நாடாகவே திகழ்கிறது. அனைவரும் நீதி, கருணை, மனிதாபிமான கொள்கைகளை உறுதியாக பின்பற்றி, வேறுபாடுகளை நீதியுடனும் பொறுப்புடனும் நிர்வகிக்கும் போதே மலேசியா மேலும் முன்னேறும்" என்று பிரதமர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ பாடிலா யூசோப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மலேசியாவின் பல இன, பல மத பல்வகைத்தன்மை இருந்த போதிலும் உலகின் அமைதியான நாடுகளில் ஒன்றாக திகழ்வதாகவும், இது அண்டை நாடுகளின் நம்பிக்கையை பெற்றுத்தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நிகழ்ச்சிகள் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதாக அமைவதுடன், மடானி கொள்கையின் கீழ் அனைத்து சமூகங்களுக்கும் சமத்துவம் உறுதிப்படுத்தப்படுவதை பிரதிபலிக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



