மின்னணுக் கழிவு மேலாண்மையில் பலவீனம்: ஊழல் மற்றும் கடும் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு வழிவகுக்கும் – SPRM
- Tamil Malar (Reporter)
- 22 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 22-
மலேசியாவில் மின்னணுக் கழிவு (e-waste) தொடர்பான கண்காணிப்பு, மேலாண்மை முறைகள் போதிய அளவில் செயல்திறன் இல்லாததால், இந்தப் பிரச்சினை நீடித்து வருவதுடன், ஊழலுக்கும் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தெரிவித்துள்ளது.
SPRM மேற்கொண்ட ஆய்வுகளில், e-waste மேலாண்மை தொடர்பான ஆளுகை (tatakelola) அமைப்புகளில் கடுமையான குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பலவீனங்களைப் பயன்படுத்தி, உள்ளூர் தரப்பினர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு குடிமக்களும் சட்டவிரோதமாக அதிக வருமானம் ஈட்டியுள்ளதாகவும், அதன் விளைவாக சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, SPRM துணை தலைமை ஆணையர்டத்தோ அஸ்மி கமாருஸாமான் கூறுகையில், e-waste மேலாண்மையில் ஏற்படும் எந்தவொரு தவறுகளையும் SPRM கடுமையாக எதிர்கொள்ளும் என்றும், சட்டவிரோதமாக லாபம் அடைய முயலும் எவருடனும் சமரசம் செய்யப்படமாட்டாது என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு, பொறுப்புள்ள தரப்பினர்கள் மட்டுமின்றி ஊழலில் ஈடுபட்ட அமலாக்க அதிகாரிகளையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களில் e-waste மேலாண்மை தொடர்பான ஆளுகை முறைகள் உடனடியாக சீர்திருத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



