தங்கத்தின் உலக சந்தை மதிப்பு 35 டிரில்லியன் டாலர் வரை உயர்வு!
- Muthu Kumar
- 10 Mar, 2026
மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக கருதப்படும் தங்கத்தை நோக்கி திரும்பியுள்ளனர்.இதன் விளைவாக உலக அளவில் தங்கத்தின் சந்தை மதிப்பு 30 முதல் 35 டிரில்லியன் டாலர் வரை உயர்ந்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மதிப்பு இந்தியா மற்றும் இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரான் நடத்திய பதிலடி நடவடிக்கைகள் உலக சந்தைகளில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,400 டாலரைத் தாண்டி 5,600 டாலரை காட்டிலும் அதிகரித்துள்ளது. மத்திய வங்கிகளின் அதிகளவு தங்க கொள்முதல் மற்றும் பணவீக்கம் குறித்த அச்சமும் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பங்குச் சந்தைகளில் முதலீட்டை குறைத்து தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இருப்பினும் போர் பதற்றம் குறைந்தால் அல்லது வட்டி விகிதங்கள் அதிகரித்தால் தங்கத்தின் விலையில் மேலும் சில திருத்தங்கள் ஏற்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .அதே நேரத்தில் உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் நாணயங்களின் மீது குறையும் நம்பிக்கை காரணமாக தங்கம் நீண்ட கால பாதுகாப்பான சொத்தாகவே தொடரும் என மற்றொரு தரப்பு ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



