வெள்ளத்தால் 53 லட்சம் மூட்டைகள் அரிசி உற்பத்தி பாதிப்பு-டத்தோ ஆர்தர் ஜோசப்!

- Muthu Kumar
- 11 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 11-
அண்மைய வெள்ளத்தால் ஐம்பத்து மூன்று லட்சம் 10கிலோ அரிசி மூட்டைகளுக்கு இணையான அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டது என்று விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது. பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் நாட்டின் உணவு உற்பத்தியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பச்சரிசி உள்ளிட்ட அரிசி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை துணையமைச்சர் டத்தோ ஆர்தர் ஜோசப் குரூப் மக்களவையில் தெரிவித்தார்.இவ்வாண்டின் வெள்ளப் பேரிடர் மிகவும்அசாதாரணமான ஒன்றாகும். இதனால், நமது நாட்டின் பச்சரிசி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு அனுப்ப வேண்டிய தலா பத்து கிலோ எடை கொண்ட ஐம்பது லட்சம் மூட்டைகளுக்கு இணையான அரிசியை நாம் இழந்திருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் பச்சரிசி விநியோகத்தில் நிலவிவரும் பற்றாக்குறையைக் களைய விவசாய அமைச்சு அமல்படுத்தியிருக்கும் முன்னெடுப்புகள் எந்த அளவுக்கு ஆக்ககரமான பலன்களைக் கொண்டு வந்துள்ளது என்று பெரிக்காத்தான் நேஷனலின் பெசுட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சே முகமது ஸூல்கிப்ளி ஜூஸோவின் துணைக்கேள்விக்குப் பதிலளித்தபோது ஆர்தர் இதனைத் தெரிவித்தார்.
வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளைக் குறைப்பதற்காக நெல் விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். அரிசி விளைச்சல் பேரிடர் நிதி மூலம் அப்பணம் வழங்கப்படும் என்று ஆர்தர் கூறினார்.
இவ்வாண்டில் வெள்ளத்தால் சேதமுற்ற உள்கட்டமைப்புகளைப் பழுதுபார்க்க மூன்று கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.ஒவ்வொரு ஹெக்டர் விவசாய நிலத்திற்கும் தலா 1,800 வெள்ளி உதவி நிதியை விவசாயிகள் பெறுவார்கள் என்றும் அவர் சொன்னார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *