9 மாநிலங்களில் வெள்ளத் தாண்டவம் 143,949 பேர் பாதிப்பு!

- Muthu Kumar
- 01 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 1-
பத்து ஆண்டுகளில் காணப்பட்டிருக்காத அளவுக்கு, ஒன்பது மாநிலங்களில் தாண்டவத்தைத் தொடரும் தொடர்ச்சியான கன மழையினால் ஏற்பட்டு வரும் மோசமான வெள்ளத்திற்கு, நேற்று மாலை 6 மணி வரையில் மொத்தம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 949 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 253 பேர் பாதிக்கப்பட்டிருந்த வேளையில், நேற்று சனிக்கிழமை மாலை 6 மணி வரையில் அவ்வெண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 949 பேராக அதிகரித்து மேலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பல பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் கடல் கொந்தளித்து வருவதாலும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் வெள்ளம் புகும் என்று சந்தேகிக்கப்படுவதால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ள மொத்தம் 43,257 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும், சம்பந்தப்பட்ட ஒன்பது மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 710 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கி இருக்கின்றனர்.
இம்முறை வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் கிளந்தான் உட்பட திரெங்கானு, கெடா, பெர்லிஸ், பேராக், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள மொத்தம் 38 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து வருகிறது.இவற்றில் சில மாநிலங்களில் சில நாட்களுக்கு முன்னர்தான் வெள்ளம் தாக்கத் தொடங்கியும் இருக்கிறது. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு வரும் கிளந்தானில், 10 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 288 வெள்ள நிவாரண மையங்களில் 28,616 குடும்பங்களைச் சேர்ந்த 92,295 பேர் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
திரெங்கானுவின் எட்டு மாவட்டங்களில் உள்ள 335 மையங்களில் 11,625 குடும்பங்களைச் சேர்ந்த 41,730 பேர் தங்கி இருக்கின்றனர்.சில நாட்களுக்கு முன்னர்தான் வெள்ளம் ஏற்படத் தொடங்கிய நெகிரி செம்பிலானில் நான்கு மாவட்டங்களில் வசித்த 574 குடும்பங்களைச் சேர்ந்த 2,004 பேர் 14 மையங்களில் தங்கி இருக்கின்றனர்.கெடாவில் ஏழு மாவட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 12,102 குடும்பங்களைச் சேர்ந்த 6,741 பேர் 53 மையங்களிலும் பெர்லிஸில் மூன்று மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மையங்களில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 295 பேரும் தங்கியிருக்கின்றனர்.
ஆகக் கடைசியாகப் பாதிக்கப்பட்டு வரும் சிலாங்கூரில் ஒரு மையத்தில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேரும் ஜொகூரில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 10 மையங்களில் 130 குடும்பங்களைச் சேர்ந்த 423 பேரும் தங்கி இருக்கின்றனர்.மலாக்காவில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 232 பேரும் பேராக்கில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 20 பேரும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தினால் இது வரையில் மூவர் பலியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *