வெள்ள நிலைமை சீரடைகிறது-துணைப் பிரதமர் தகவல்!

- Muthu Kumar
- 03 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 3-
தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது நாடு முழுவதும் வெள்ள நிலைமை சீரடையத் தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது என்று துணைப் பிரதமர் அமாட் ஸாஹிட் ஹமிடி நேற்று தெரிவித்தார். துயர்துடைப்பு மையங்களின் மொத்த எண்ணிக்கை 561இல் இருந்து 13.69 விழுக்காடு குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 8.7 விழுக்காடு குறைந்து 37,759ஆக பதிவாகி உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிளந்தானிலும் திரெங்கானுவிலும் நிலைமை சீரடைந்து வருகிறது என்றார் அவர். கிளந்தானில் துயர்துடைப்பு மையங்களின் எண்ணிக்கை 217ஆக குறைந்துள்ளது.பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையும் 24,238ஆக குறைந்துள்ளது. திரெங்கானுவிலும் கிட்டத்தட்ட இதே நிலையே நிலவி வருகிறது.
ஆனாலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்களின் பாதுகாப்புக்கு அவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் துணைப் பிரதமர் அறிவுறுத்தினார்.நீர்மட்டம் குறைந்து வந்தாலும், அதில் விளையாடவோ இறங்கவோ கூடாது. மழையினால் தேங்கும் நீர் பொதுவாக தூய்மைக்கேடானதாக இருக்கும். இதனால் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படலாம். நோய்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. விஷப் பிராணிகளால் கடிக்கப்படும் ஆபத்தும் இருக்கிறது என்றார் அவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *