அஸிலாவின் அபிடெவிட் குறித்து விசாரணை நடத்த அல்தான்துயா குடும்பம் கோரிக்கை!

- Muthu Kumar
- 04 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 4-
அஸிலா ஹட்ரியினால் வெளியிடப்பட்டுள்ள ஓர் அபிடெவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டு மீது விசாரணை ஒன்றை நடத்துமாறு, கொலை செய்யப்பட்ட மங்கோலிய மோஸ்தர் அழகி அல்தான்துயா ஷாரிபுவின் குடும்பத்தினர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.அல்தான்துயா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள, சிறப்பு போலீஸ் நடவடிக்கைப் பிரிவின் இரண்டு முன்னாள் உறுப்பினர்களில் ஒருவர்தான் அஸிலா ஹட்ரியாவார்.
அல்தான்துயாவை “ஒழித்துக் கட்டி விட்டு தடயங்களையும் அழித்துவிடுமாறு” “உயர் பதவியில் இருந்த அரசாங்க அதிகாரிகளிடமிருந்து” தாம் உத்தரவைப் பெற்றதாக, அஸிலாவின் அபிடெவிட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மூலம் அரசாங்கம் அஸிலாவின் அபிடெவிட்டுக்கு எதிராக விசாரணை நடத்தப்படவில்லை என்று, அல்தான்துயா குடும்பத்தின் வழக்கறிஞர் சங்கீத் கோர் டியோ தெரிவித்தார்.
அஸிலாவின் குற்றச்சாட்டை விசாரிப்பதன் மூலம், சட்டத்தை நிலைநாட்டும் தனது வாக்குறுதியை அரசாங்கம் அவசியம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அஸிலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி குறைத்து, 40 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றியிருந்தது. அஸிலாவுக்கு கட்டாயம் 12 பிரம்படிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அல்தான்துயாவின் குடும்பத்திடமிருந்து வந்த ஒரு கடிதம் மற்றும் கூடுதல் அபிடெவிட்டை கருத்தில் எடுத்துக் கொண்ட பின்னர் கூட்டரசு நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கி இருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *