மலேசிய கலைத்துறையின் சகலகலா நாயகன் ஸ்ரீ குமரன் முனுசாமி

top-news
FREE WEBSITE AD

“யாரையும் வெறும் காகிதமாக பார்க்காதீர்,நாளை அது பட்டமாக வானில் பறந்தால் நாம் கூட நிமிர்ந்து பார்ப்போம்“ அப்படி பார்க்க வைத்தவர்தான் கோலா கங்சார் காராய் தோட்டத்தின் தமிழ்ப்பள்ளியில் படித்து, தனது குரலால் தமிழ் மொழி தரணியெங்கும் பரவ, 2012ஆம் ஆண்டிலிருந்து முயற்சி செய்தவர்தான் ஸ்ரீ குமரன் முனுசாமி. பல குரல் தேர்வுகளில் தோல்வியை மட்டுமே கண்டு, இன்று அவரின் குரல் மலேசியாவின் எத்திசை முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதுமிகையில்லை.

தோல்விகளை மட்டுமே பார்த்து வந்த எனக்கு, 2014ஆம் ஆண்டு வானொ‘லியில் செய்தி வாசிப்பாளர்களுக்கான தேர்வு நடைபெறவிருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இதன் பிறகும், குரல் தேர்வுக்குச் செல்ல வேண்டாம் என்று எண்ணும் பொழுதுதான் இறுதியாக ஒருமுறை முயற்சி செய்தேன். அதற்கும் செய்தி வாசிப்பது, செய்திகளை எழுதுவது போன்ற நேர்முகத் தேர்வுகளைச் செய்தேன். அதில் தேர்வு செய்யப்பட்டேன். அவ்வாறே என்னுடைய இந்தப் பயணம் தொடங்கியது என்று ஸ்ரீ குமரன் தமிழ் மலரிடம் தெரிவித்தார்.

முதன் முதலில், ராகாவின் வழியே என்னுடைய குரல் ஒலிக்கப்பட்டது. பிறகு, ராகாவின் வழி பல விளம்பரங்களுக்கு குரல் பதிவு செய்தேன். அதன் வழியே, ஒரு நாள் தொலைக்காட்சியில் வல்லவன் சீசன் 3-இன் பின்னணி குரலுக்குத் தேர்வு செய்யப்பட்டேன்.

அதன் பிறகுதான், நிகழ்ச்சி தொகுப்பாளராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விழுதுகள் நிகழ்ச்சியின் தேர்வில் தேர்வு செய்யப்பட்டேன். விழுதுகளின் 2 வருட பயணத்திற்கு பிறகுதான், நடிகராக பரிணாமம் அடையும் வாய்ப்புக் கிடைத்தது. தீபாவளி படமானா ‘நோ கோலம், நோ தீபாவளி’ படம்  வழி அறிமுகமானேன். பிறகு, சாலினி பாலசுந்தரம் இயக்கத்தில் காதல் கலாட்டா, வீடு புரோடாக்‌ஷன் வழி தமிழ் லட்சுமி, இன்பமே சூழ்க, ஆர்டிஎம் நிகழ்ச்ச்சிகள், மலாய் படங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டேன். பிறகு, தைப்பூச நேரலை, சரசடி ஆகிய நிகழ்ச்சிகளின் வழி என்னுடைய இந்தப் பயணம் இன்னும் தொடரப்பட்டது எனலாம். 



முதல் முதலில் கேமராவின் வழி அறிமுகமானதில் தங்களின் உணர்வு எவ்வாறு இருந்தது??

பதற்றமாகத்தான் இருந்தது. நான் பொதுவாகவே யாரிடமும் பேசும் நபர் கிடையாது. வானொலியில் பேசும் பொழுது கூட அந்தளவு பதற்றம் கிடையாது. ஆனால், தொலைக்காட்சி அதுவும் நேரலை எனும் பொழுது பயம் அதிகமாகவே இருந்தது எனலாம். தவறான சொல் உச்சரிப்பு, பயன்பாடு என பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது எனலாம். பல நிகழ்ச்சிகள், நேரலைகளைக் கடந்தும் இன்றளவும் அந்தப் பயமும் பதற்றமும் இருக்கும் எனலாம். 

ஆனால், இந்தப் பயணத்தில் பலமுறை பல இடர்களைச் சந்திருத்திருந்தாலும், பல இடங்களில் பலர் என்னை தூக்கி விட்டுள்ளனர். உடல்பாவனை, செய்கைகள், பேசும் திறன், ஆடை அணிகலன்கள், நிகழ்ச்சி உரைகள் தயாரித்தல் என்று பலர் எனக்கு உந்துகோலாக இருந்துள்ளனர் எனலாம். 
நிகழ்ச்சி தொகுப்பாளராக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்த என்னை, மக்கள் அவர்களின் குடும்ப சுப நிகழ்ச்சிகளுக்கும் என்னுடைய குரல் ஒலிக்க வேண்டும் என்று தேர்வு செய்து வருகின்றனர். 


உங்களின் பார்வையில் மலேசியக் கலைத்துறையை எவ்வாறு பார்க்கீறிர்கள்?

மலேசியக் கலைத்துறையில் வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கின்றது எனலாம். அதேபோல், திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்கப் பெறுகின்றது.

நீங்கள் நடித்த கதாபாத்திரத்தில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் எது??

எனக்குப் பிடித்த கதாபாத்திரம் தமிழ் லெட்சுமி நாடகத்தின் கணேஷ் என்ற கதாபாத்திரம். தமிழ் லெட்சுமி மிக ஆரம்பக் காலக்கட்டத்தில் நடித்த நாடகம். அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் மெருகூட்டி மேம்படுத்திச் செய்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

உங்களின் இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர், நடிகர் என்ற நிலைகளில் சவால்கள் என்று பெரிதும் எதுவுமில்லை. முதன் முதலில் தொடக்கத்தில் சவால்கள் இருந்தன. ஏனென்றால், அனைத்தையும் அந்தந்த துறையில் ஈடுபட்ட பிறகே கற்றுக் கொண்டேன். பலரின் தூற்றல்களுக்குப் பிறகுதான், என்னை நான் உயர்த்திக் கொண்டேன்.



தனிப்பட்ட வாழ்க்கையையும் கலைத்துறையையும் எவ்வாறு நிர்வகித்துக் கொள்கிறீர்கள்?

வாரத்தில் 5 நாட்கள் வேலை இருந்தாலும், இரண்டு நாட்கள் முழுமையாகக் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவேன். முடிந்தவரை, இரண்டையும் சமநிலையில் நிர்வகித்து வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். 

ஒரு கலைஞனுக்கு எது முக்கியம்?

செய்யும் தொழிலே தெய்வம் என்பர். நாம் செய்யும் வேலையை நாம் மதிக்கவும் விரும்பவும் வேண்டும். அதனை நேசிக்கவில்லை என்றால் நம்மால் அதில் சிறந்தவற்றை வழங்கவே முடியாது. ஒரு விஷயத்தை எவ்வாறு விரும்பி செய்கிறோமோ அவ்வாறே அதன் முடிவும் அமையும். என்னை பொறுத்தமட்டில், நான் இருக்கும் இந்தக் கலைத்துறையில் காரணமில்லாமலும் அவசியமில்லாமலும் விடுப்பு எடுத்தது கிடையாது. அது என் துறையில் நான் வைத்திருக்கும் அதீத அன்பையும் காதலையும் காட்டுகிறது எனலாம்.


மக்களுக்குத் தெரியாத ஸ்ரீ குமரன் பற்றி ஏதாவது ஒரு தகவல் என்ன?

உணவுகளை மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவேன். என்னைப் பொறுத்தமட்டில், உணவு என்பது ருசியில் மட்டுமல்லாது அதன் வர்ணம், வடிவம் ஆகியவற்றில் சரியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவேன். ஆதலால், நான் பெரும்பாலும் சமைக்கும் பொழுது, மிகவும் உன்னிப்பாக கவனித்து, பிடித்தமான வகையில் சமைத்து உண்ணுவேன்.

அண்மையில், உங்களைப் பற்றி உதயா அவர்கள் பேசும் ஒரு காணொளி வெளியிடப்பட்டது. அதை பற்றி தங்களின் கருத்து என்ன?

உதயா அவர்கள் மிகவும் பிரபலமானவர் மட்டுமல்லாமல் எனக்கு முன்னுதாரணமாக இருப்பவர். அவரிடமிருந்து என்னைப் புகழ்ந்து பேசும் காணொளி வெளி வந்தததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவ்வப்பொழுது மட்டுமல்லாமல் எப்பொழுதும் அவர் என்னைப் பற்றி சிறந்த விசயங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டு வருவார். அவரைப் போன்றே ராம் அவர்களும். அவரும் எப்பொழுதும் என்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு, பெருமையாகப் பேசுவார்.

இவ்வேளையில் யாருக்கு நன்றி கூற விரும்புகிறீர்கள்?

முதலில், என்னுடைய அப்பா அம்மாவிற்கு நன்றி கூற விரும்புகிறேன். அம்மா அப்பாதான் என்றுமே எனக்கு உற்சாகமும் ஊக்கமும் கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், என்னுடைய அக்கா அனைவருக்கும் இவ்வேளையில் நன்றி. நான் படிக்கும் பொழுதும், கலைத்துறையில் ஈடுபடும்பொழுதும் ஆதரவாகவும் பண ரீதியிலும் பல உதவிகளைச் செய்துள்ளனர். அதோடு, நான் விழுதுகளில் ஈடுபடும் பொழுது செய்தி வாசிப்பை விட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்பொழுது என்னுடைய நான்காவது அக்கா லோகேஸ்வரி எனக்கு ஆலோசனை கொடுத்து தன்னம்பிக்கையையும் கொடுத்தார். பிறகு, என்னுடைய மனைவிக்கும் நன்றி. குறிப்பாக, நடிக்கும் பொழுது பெண்களுடன் நெருக்கமாக பழகும் பல காட்சிகள் இருக்கும். அதை அனைத்தையும் புரிந்து கொண்டு எனக்குப் பக்கப் பலமாக இருந்து வருகிறார். அனைத்து விஷயங்களிலும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். அதோடு, கலைத்துறையின் பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, என்னுடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய இந்தக் கலைப் பயணத்தில் நான் சரியாகப் பயணிக்கிறேன் என்பதை உணர்த்தி வருபவர்கள் அவர்கள்தான். இறுதியாக, இவ்வாழ்க்கையைத் தந்த கடவுளுக்கு நன்றி.

இந்தக் கலைத்துறை பயணத்தில் நான் நிறைய அவமானங்கள், தடைகள், இழிச்சொற்கள், துரோகங்கள், பறிமுதல்கள் ஆகியவற்றை கடந்து உருவாகிய ஒரு உலகமாக இருக்கிறேன். அதனை உருவாக்குவது அவ்வளவு எளிது அல்ல என்றார் ஸ்ரீ குமரன் முனுசாமி.இன்னும் பல சாதனைகளும் விருதுகளும் பெற தமிழ் மலரின் வாழ்த்துகள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *