உலகளாவிய ஆற்றல் நெருக்கடி குறித்து போலி செய்திகள் – 36 விசாரணை கோப்புகள் திறப்பு
- Surendran Sumdraraj
- 08 Apr, 2026
புத்ராஜெயா, ஏப். 8-
உலகளாவிய ஆற்றல் நெருக்கடியைச் சுற்றி சமூக ஊடகங்களிலும் டிஜிட்டல் தளங்களிலும் பரவிய போலி செய்திகளுக்கு எதிராக, மலேசிய தொடர்பாடல் மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) 36 விசாரணை கோப்புகளைத் திறந்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 22 பேரிடம் விளக்கமறியல் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, தவறான தகவல்களின் பரவலைக் கட்டுப்படுத்தவும், சமூகத்தில் தவறான புரிதலைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை ஆறு விசாரணை கோப்புகள் துணை பொது வழக்கறிஞரிடம் மேலதிக ஆய்வு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் MCMC தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகள் அனைத்தும் 1998ஆம் ஆண்டின் தொடர்பாடல் மற்றும் பல்லூடகச் சட்டம் (சட்டம் 588) பிரிவு 233ன் கீழ் விசாரணை செய்யப்படுகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகள் அதிகபட்சம் 5 லட்சம் வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பொய்யான தகவல்களை பகிர்வது சமூகத்தில் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுமக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



