இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்கா மலேசியாவை நன்றாக நடத்தாது-தூதர் நஸ்ரி!

- Muthu Kumar
- 08 Feb, 2025
கோலாலம்பூர், பிப்.8-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையே தொலைபேசி உரையாடலை நடத்துவதற்கு அந்நாட்டுக்கான மலேசியத் தூதர் நஸ்ரி அஸிஸ் ஏற்பாடு செய்யவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஒங் கியான் மிங் குற்றம் சுமத்தியுள்ளார். அக்குற்றச்சாட்டை நஸ்ரி நேற்று நிராகரித்தார்.
பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக மலேசியா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடு உலகம் முழுவதும் அறிந்த ஒன்றாகும். ஆகவே, குறிப்பிட்ட சில நாடுகளிடம் அமெரிக்கா காட்டிவரும் அதே இணக்கமான போக்கை மலேசியாவும் எதிர்பார்க்கக் கூடாது என்று விரைவில் பதவி விலகிச் செல்லவிருப்பவரான நஸ்ரி குறிப்பிட்டார்.
அன்வாருக்கும் டிரம்புக்கும் இடையே தொலைபேசி உரையாடலுக்கு தாம் போதுமான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று முன்னாள் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினருமான ஒங் கியான் மிங் குறை கூறியிருப்பது பற்றி குறிப்பிட்ட நஸ்ரி, அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பலவீனமான மனம் கொண்டவர் என்று வருணித்தார்.
டிரம்பின் அரசாங்கம் இஸ்ரேலை முழுமையாக ஆதரிக்கக் கூடியதாகும். எனவே, அவர் தமது மூளையைப் பயன்படுத்த வேண்டும். நமது நிலைப்பாடு அமெரிக்காவுக்கு எதிரானதாக இருக்குமானால், அந்நாட்டிடமிருந்து நாம் என்ன நல்லதை எதிர்பார்க்க முடியும் என்று நஸ்ரி வினவினார்.ஒருபுறம் இஸ்ரேலுக்கு எதிராக ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு மறுபுறம் டிரம்பின் நிர்வாகத்திடம் பேச துடியாகத் துடித்தால் அது நமது இரட்டை வேடத்தைக் காட்டுவதாக இருக்கும். அமெரிக்காவுடன் நாம் நயந்து போவதா அல்லது நமது நிலைப்பாட்டைத் தற்காப்பதா? இவற்றில் ஒன்றைத்தான் நாம் செய்ய வேண்டிவரும் என்றார் அவர். டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு அவருடைய அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பேசும்படி பிரதமரின் அலுவலகத்திடம் தெரிவித்தேன்.
டிரம்ப் பல்வேறு பணிகளில் மூழ்கியிருப்பதால் நேரமின்மை காரணமாக அவரால் பேசமுடியவில்லை என்று பிரதமரின் அலுவலகம் கூறியது.அதனைத் தொடர்ந்து அவருக்கு பிரதமரின் சார்பில் வாழ்த்துச் செய்தி அனுப்பும்படி கூறினேன். அவ்வாறே பிரதமரின் அலுவலகம் செய்தது என்று நஸ்ரி சொன்னார். அன்வாருக்கும் டிரம்புக்கும் இடையே தொலைபேசி உரையாடலை ஏற்பாடு செய்யத் தவறியதாக நஸ்ரியை முன்னதாக ஒங் கியான் மிங் குற்றஞ்சாட்டியிருந்தார்.
டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பே இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளின் தலைவர்கள் அவருடன் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர் என்று முன்னாள் துணை வர்த்தக துணையமைச்சருமான ஒங் கியான் மிங் கூறியிருந்தார்.
“டிரம்புடன் அன்வார் பேசாததால் அதனை ஒரு மிரட்டலாக நாம் கருத வேண்டியதில்லை. அமெரிக்காவுடன் மிகச் சிறந்த நண்பராக இருப்பதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? சீனா, ரஷியா மற்றும் இந்தியா போன்ற இதர நாடுகளும் நம்மை நன்றாகத்தான் நடத்துகின்றன என்று நஸ்ரி சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *