தங்கமும், பிளாட்டினமும் நிரம்பிய விண்கல்!

- Muthu Kumar
- 07 Jun, 2025
தங்கமும், பிளாட்டினமும் நிரம்பிய விண்கல் ஒன்றை ஆய்வு செய்ய நாசா முயன்று வருகிறது. இதற்காக அனுப்பப்பட்ட விண்கலம், 2029ம் ஆண்டில் அந்த விண்கல்லில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது மட்டும் சாத்தியமானால், அந்த விண்கலிலிருந்து தங்கத்தை வெட்டி எடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
'16 சைக்' என்பதுதான் அந்த விண்கல்லின் பெயர். இது செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையில் இருக்கிறது. இதை ஆய்வு செய்ய நாசா சார்பில் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டது. இது, இப்போது வரை 2 கோடி கி.மீ-ஐ கடந்திருக்கிறது. ஆனால் இன்னும் செவ்வாய் கிரகத்தை கூட நெருங்கவில்லை. விரைவில் செவ்வாய் கிரகத்தை நெருங்கி, பின்னர் அங்கிருந்து '16 சைக்' விண்கல்லை நோக்கி பயணிக்கும்.
விஷயம் என்னவெனில் இந்த விண்கல்லில் உள்ள அரிய உலோகங்களின் மதிப்பு மிக மிக அதிகம். இதன் மொத்த மதிப்பு $100,000 குவாட்ரில்லியன் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. 1 என்கிற எண்ணுக்கு பக்கத்தில் 15 பூஜ்ஜியங்களை போட்டால் எவ்வளவு வருமோ அதுதான் $100,000 குவாட்ரில்லியனாகும். இன்னும் விளக்கமாக சொல்வதெனில், நீங்கள் ஒரு வினாடிக்கு 1 அமெரிக்க டாலர் செலவு செய்கிறீர்கள் எனில், $100,000 குவாட்ரில்லியனை செலவு செய்ய உங்களுக்கு 3,170 கோடி ஆண்டுகள் தேவைப்படும்.
அந்த அளவுக்கு மதிப்பு மிக்க உலோகங்கள் இந்த விண்கல்லில் இருக்கின்றன. இதை முதலில் ஆய்வு செய்து, பின்னர் அங்கிருந்து அந்த உலோகங்களை வெட்டி எடுக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் சாத்தியமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில் இந்த விண்கல் 1852ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இன்னும் அங்கு விண்கலத்தை கூட நம்மால் அனுப்ப முடியவில்லை. இப்படி இருக்கையில் அதிலிருக்கும் தங்கத்தை எப்படி வெட்டி எடுப்பது?
நிலவிலிருந்து மண் துகள்களை சாம்பிள் எடுத்து வருவதற்கே ஏராளமான பணமும், நேரமும் செலவாகிறது. அப்படி இருக்கும்போது எங்கோ, கண்ணுக்கே தெரியாத தூரத்தில் இருக்கும் விண்கல்லை உடைத்து, உள்ளே இருக்கும் தங்கத்தையும், பிளாட்டினத்தையும் எப்படி கொண்டுவர முடியும்? இதற்கான டெக்னாலஜி கூட நம்மிடம் இல்லை. ஆனால் நிச்சயம் என்றாவது ஒரு நாள் எலான் மஸ்க் போன்றோர் இதை செய்யலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இப்போது நமக்கிருக்கும் முதன்மை நோக்கம், தங்கத்தையோ, பிளாட்டினத்தையோ வெட்டி இங்கு கொண்டு வருவது கிடையாது. மாறாக, அந்த விண்கல்லில் எப்படி தங்கமும் இதர அரிய உலோகங்களும் சேர்ந்தது? நமது பூமியின் மேற்பகுதி கடினமான பாறைகளாலும், மண்ணாலும் சூழப்பட்டிருக்கும்போது, ஒரு விண்கல் எப்படி உலோகத்தால் சூழப்பட்டிருக்க முடியும்? இது எப்படி சாத்தியம் என்பதை ஆய்வு செய்வதுதான். இந்த ஆய்வின் மூலம் நமது பூமியின் தோற்றம் குறித்து ஏராளமான உண்மைகளை அறிந்துக்கொள்ள முடியும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *