மலாய்காரர்கள் பிளவுபட நான்தான் காரணமா?! - மகாதிர் மறுப்பு
- Shan Siva
- 08 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 8: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது, 2016-ல் அம்னோவிலிருந்து விலகிய பிறகு பெர்சாத்து கட்சியை உருவாக்கிய தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார். அது மலாய் சமூகத்திற்குள் பிளவை ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.
முகநூல் பதிவு ஒன்றில், அம்னோ கட்சி அதன் உண்மையான போராட்டத்திலிருந்து விலகிச் சென்றதாலும், தேசம், இனம் மற்றும் மதத்தின் நலன்களுக்கு இனி முன்னுரிமை அளிக்காததாலும் தான் அம்னோவிலிருந்து விலகியதாக மகாதிர் குறிப்பிட்டுள்ளார்.
அம்னோவின் போக்கினால் அதிருப்தி அடைந்த மலாய்க்காரர்களுக்கான ஒரு அரசியல் தளமாகவே பெர்சாத்து கட்சி நிறுவப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், பல அம்னோ உறுப்பினர்கள் கட்சியில் நீடிக்கத் தேர்ந்தெடுத்ததாகவும், விலகிய மற்றவர்கள் பெர்சாத்துவில் சேராததால் ஆதரவில் பிளவு ஏற்பட்டதாகவும் மகாதிர் கூறினார்.
ஆகவே, தேசம், இனம் மற்றும் மதத்திற்காகப் போராடும் மலாய் கட்சியாக அம்னோவிற்குப் பதிலாக பெர்சாத்துவால் வெற்றி பெற முடியவில்லை. 2018 பொதுத் தேர்தலில், பெர்சாத்து வெறும் 13 இடங்களை மட்டுமே வென்றது.
அதனால் மலாய்காரர்கள் பிளவுபட்டனர் என்று கூறிய அவர், பெரும்பான்மையினர் பெர்சாத்துவில் இணைந்திருந்தால் இத்தகைய பிளவு ஏற்பட்டிருக்காது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் அம்னோ, பெர்சாத்து மற்றும் பெஜுவாங் கட்சிகளுக்குத் தலைமை தாங்கிய மகாதிர், மலாய்காரர்களை அடிப்படையாகக் கொண்ட பல கட்சிகள் உருவாக்கப்பட்டதால் பிளவுகள் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டிருக்கும் என்று கூறினார்.
மற்ற கட்சிகளில் இணைந்ததால்தான் மலாய்காரர்கள் பிளவுபட்டனர் என்று அவர் கூறினார்.
கடந்த வாரம், கட்சிகளின் பெருக்கம் மலாய் மக்களைப் பிளவுபடுத்தி, அவர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தியுள்ளதால், எந்தவொரு மலாய் கட்சியும் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று மகாதி கூறினார்.
தவறு மலாய் மக்களிடமே உள்ளது என்றும் மேலும் கூறினார்.
இருப்பினும், தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் பல அரசியல் கட்சிகளை நிறுவியதன் மூலம் அந்தப் பிளவை ஏற்படுத்தியது மகாதிர்தான் என அம்னோமற்றும் அமானா உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டினர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



