குற்றவாளிகளுக்கான பொது மன்னிப்பு பேரரசரின் தனி உரிமை! - இஸ்தானா நெகாரா விளக்கம்

- Shan Siva
- 04 Jan, 2025
கோலாலம்பூர்,
புத்ராஜெயா, லாபுவான் ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களில் புரியப்படும் குற்றங்களுக்கு
நீதிமன்றத்தால் விதிக்கப்படும் தண்டனையை ரத்து செய்வதற்கும் முடக்கம்
செய்வதற்கும் தண்டனைக் குறைப்பு செய்வதற்கும் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின்
42 (1) மற்றும் 2 ஆவது விதியின் கீழ் பேரரசருக்கு அதிகாரம் உள்ளது
என்று நேற்று இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு
வாரியத்தின் ஆலோசனையின்படி அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தும் அதிகாரம்
பேரரசருக்கு உள்ளது. மன்னிப்பை வழங்கக்கோரும் அல்லது தண்டனையைக் குறைக்கக்கோரும் பரிந்துரை எதுவாக
இருந்தாலும் பரிசீலனை செய்யப்படுவதற்காக அதனை மன்னிப்பு வாரியத்திடம் வழங்க
வேண்டும்.
ஆகவே, ஒரு கைதியின் சார்பில் மன்னிப்புக் கோரும் அல்லது
தண்டனையைக் குறைக்கக்கோரும் தரப்பினர் தங்களின் விண்ணப்பத்தைப் பேரரசரின் தலைமையிலான அடுத்த மன்னிப்பு வாரியத்தின்
கூட்டத்தில் சமர்ப்பிக்கலாம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இஸ்தானா
நெகாரா கூறியது.
எல்லாத்
தரப்பினரும் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். இதுபோன்ற
விவகாரங்களில் சட்ட ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியது.
வரும்
திங்கள்கிழமை 6ஆம் தேதியன்று புத்ராஜெயாவில் முன்னாள் பிரதமர் நஜிப் துன்
ரசாக்கிற்கு ஆதரவாக பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் நஜிப்பை
வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பான அவரின் விண்ணப்பத்தை மேல்முறையீட்டு
நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். நஜிப் உட்பட கூட்டரசுப்
பிரதேசத்தில் உள்ள கைதிகள் தங்களின்
எஞ்சிய கால சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழிக்க விரும்பினால் அவர்கள்
தங்களின் விண்ணப்பத்தை மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று
கடந்த புதன்கிழமையன்று சட்டத்துறைத் தலைவரின் அலுவலகமும்
அறிவித்திருந்தது.
எஸ்ஆர்சி
இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள்
சிறைத்தண்டனையை ஆறு ஆண்டுகளாகவும், 21 கோடி வெள்ளி
அபராதத்தை ஐந்து கோடி வெள்ளியாகவும் குறைக்க கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம்
தேதியன்று அப்போதைய பேரரசர் தலைமையில் கூடிய கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம்
முடிவு செய்தது. நஜிப் தமது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கும்
அக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அக்கூட்டத்தில்
அப்படிப்பட்ட ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதை மன்னிப்பு வாரியம்
அறிவிக்காமல் உள்ளது என்று நஜிப் தரப்பு வாதிட்டு வருகிறது. அந்த உத்தரவை
அரசாங்கம் மதித்து நடக்காமல் இருப்பது நீதி மன்ற அவமதிப்பாகும் என்றும் அவர்
எச்சரித்துள்ளார். அதன் தொடர்பாக நஜிப்
சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தை புத்ராஜெயாவில்
உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை செவிமடுக்கவுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *