மேடையில் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி!

- Muthu Kumar
- 16 Jun, 2025
என் மீது தவறு இருந்தால் ஐயா ராமதாஸ் மன்னித்து விட வேண்டும் என்றும் என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள்,மகனாக நான் செய்கிறேன் என அன்புமணி கூறியுள்ளார். இதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியில் பிரச்னை முடிவுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி - ராம்தாஸ் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அண்மையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸை அன்புமணி சந்தித்து பேசினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை டிராவில் இருப்பதாகவும் ராமதாஸ் கூறினார். அதைத் தொடர்ந்து அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான விமர்சனங்களையும் அவர் முன்வைத்தார்.
மேலும், தன் மூச்சு காற்று இருக்கும் வரை, தான் தான் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர், நிறுவனர் என ராமதாஸ் திட்டவட்டமாக கூறியிருந்தார். மேலும், அன்புமணிக்கு எந்த பதவியும் கிடையாது என்றும் கூறியிருந்தார். இப்படியாக இருவருக்கு கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூரில் அன்புமணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினர். பின்னர் இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதைத் தொடர்ந்து, ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதாவது, அன்புமணி பேசுகையில், "இன்று தந்தையர் தினம்.மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு எனது தந்தையர் தின வாழ்த்துக்கள். ஐயா 100 வருடம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். என் மீது ஏதேனும் கோபம் இருந்தால் ஐயா அவர்கள் மன்னிக்க வேண்டும். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்று பெரிதல்ல. மகனின் கடமையாக உங்களை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்வது எனது கடமை. ஐயா அவர்கள் வருத்தப்படாதீர்கள். கோபப்படாதீர்கள்.
நீங்கள் உருவாக்கிய கட்சி இது. இன்று நீங்கள் தேசிய தலைவர். பிரதமர் மோடி வந்து சொன்ன வார்த்தைகள் எல்லாம் நான் மறக்க முடியாது. இந்தியாவில் மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ் என பிரதமர் மோடி பாராட்டி இருந்தார். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். மகனாக நான் தலைவனாக செய்து முடிக்கிறேன்" என தெரிவித்தார். மன்னிப்பு கேட்ட அன்புமணி, தான் கட்சியின் தலைவராக என குறிப்பிட்டு பேசியிருக்கிறார். ஆனால், ராமதாஸ் தான் தான் பாமகவின் தலைவர், நிறுவனர் என கூறிக் கொண்டு வருகிறார்.
முன்னதாக, தந்தையர் தினத்துக்கு வாழ்த்து கூறிய அன்புமணி ராமதாஸ், "தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம். தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்" என பதிவிட்டு இருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *