கேலிக்கு மத்தியில் பட்டதாரியானார் பத்திரிக்கை விற்பனையாளரின் மகள் புவனேசுவரி சுந்தர பாண்டியன்!
.jpg)
- Thina S
- 04 Dec, 2024
மலாயாப் பல்கலைக்கழகத்தின் 64-ஆவது பட்டமளிப்பு விழாவில் இந்திய ஆய்வியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 30 மாணவர்களுக்கு, ஓம்ஸ் அறவாரியத்தின் சார்பில் தங்கப் பதக்கம் வழங்கட்டது.
இந்த தங்கப் பதக்க நிகழ்வில், அலோர் ஸ்டாரைச் சேர்ந்த பத்திரிகை வியாபாரியான சுந்தர பாண்டியன் - கனகேஸ்வரி தம்பதியரின் மகள் புவனேஸ்வரி சுந்தர பாண்டியன், தன் பெற்றோரின் தியாகத்தை, அவர்களின் வலியை கண்ணீர்ப் பெருக்கெடுக்க சபையில் பேசியது அனைவரையும் கலங்கச் செய்தது. ஒரு பத்திரிகை வியாபாரியின் மகளும் பட்டதாரியாகலாம் என்பதற்கு சாட்சியாய் தான் நிற்பதாகப் பெருமிதத்தோடு அவர் கூறினார். தனது தந்தை ஒரு பத்திரிகை வியாபாரி என்றும், பத்திரிகை விற்பவரின் மகளுக்குப் பல்கலைக்கழகமா? எனும் கேலி கிண்டல்களுக்கு மத்தியில்தான் தாம் பல்கலைக்கழகத்தில் தற்போது சிறப்புத் தேர்ச்சிப் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று
நான் தங்கப் பதக்கம் பெறுகிறேன்…. இது என்
பெற்றோருக்கான வெற்றி. ஆனால், நான் தங்கம் பெறும் அந்த உன்னத
தருணத்தை, அவர்களின்
சாதனைக்கான அங்கீகாரத்தை நான் பெறும் வேளையில் கூட அவர்கள் என்னோடு இருக்க முடியாத
சூழல். அவர்களுக்கு ஆசைதான் நான் தங்கம் பெறுவதைப் பார்க்க... ஆனால், நாளை மீண்டும் பத்திரிகை விற்பதற்கு என் தந்தை சென்றாக வேண்டும். பத்திரிகை விற்பனையாளர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. அந்தக்
கட்டாயத்தின் பேரில் தங்கள் கனவு நனவான தருணத்தின் தங்க அங்கீகாரத்தைப்
பார்க்காமல் சென்றுவிட்டனர். அந்த தியாகத்தின் திருவுருவங்களை நான் வணங்குகிறேன்.
பத்திரிகை விற்பவரின் பிள்ளைக்குப் பல்கலைக்கழகமா என எள்ளி நகைத்த கூட்டத்திற்கு முன், என்னையும் என் அக்காளையும் பட்டதாரியாக்கி இருக்கிறார்கள். அதே பத்திரிகை வியாபாரிதான் என் அக்காள் ராஜ ராஜேஸ்வரி சுந்தர பாண்டியனை துன் ஹுசைன் ஓன் பல்கலைக்கழகப் பட்டதாரியாக்கினார். அடுத்து என் தம்பி ராகவேந்திரா சுந்தர பாண்டியன் போலிடெக்னிக்கில் டிப்ளோமா பயில்கிறார். அவரும் பட்டதாரியாக மிளிரும் நாள் தூரமில்லை என உணர்ச்சிப் பெருக்கில் அவர் கர்வமாய் சொன்னதில் அந்தக் கர்வத்தை அனைவரும் வரவேற்று நெகிழ்ந்தனர். அந்த மாணவியின் தாய் தந்தையரை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
இவ்வேளையில்
தனது மூன்று பிள்ளைகளையும் சிரமம் பாராது படிக்க வைத்துப் பட்டதாரியாக தலைநிமிரச்
செய்த அந்தப் பெற்றோர்களை தமிழ் மலர் வாழ்த்துகிறது. மேலும் பதக்கம் பெற்ற அனைத்து
சிறப்புக்குரியவர்களையும் தமிழ் மலர் வாழ்த்துகிறது.
தற்போது
புவனேஸ்வரி சுந்தர பாண்டியன் தமிழ்க் கற்பித்தலில் பட்டயக் கல்வியை மேற்கொண்டு, ஆசிரியராகும் தமது கனவை நோக்கிப் பயணத்தை
மேற்கொண்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *