மூத்த குடிமக்களுக்கு “இன்ஃபுளூவென்சா" தடுப்பூசி-இம்மாதம் 18ஆம் தேதி தொடக்கம்!

- Muthu Kumar
- 10 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 10-
இணைநோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மூத்த குடிமக்களுக்கு “இன்ஃபுளூவென்சா" தடுப்பூசி போடும் இயக்கம் அரசாங்க சுகாதார மையங்களில் இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கும் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
"இன்ஃபுளூவென்சா" தடுப்பூசி இயக்கம் தொடக்கத்தில் சுகாதார முன்களப் பணியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அறுபது வயதுக்கும் மேற்பட்டோருக்கும் குறைந்தது ஓர் இணைநோயாளிக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ரட்ஸி அபு ஹசான் கூறினார்.
ஆயினும், தகுதியுடையவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் தடுப்பூசியின் கையிருப்பைத் பொறுத்தும் அத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் ஐந்நூறு சுகாதார மையங்களில் தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான சுற்றறிக்கை செவ்வாய்க்கிழமை (நாளை) நடப்புக்கு வருகிறது.
தடுப்பூசி மருந்துகள் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்படவுள்ளன. அதன் பிறகு அவை தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றார் அவர்.தடுப்பூசி இயக்கத்தையும் மருந்துகளின் விநியோகத்தையும் மாநிலச் சுகாதாரத்துறைகளுடன் இணைந்து சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் என்றும் டாக்டர் ரட்ஸி தெரிவித்தார்.
தேசியத் தடுப்பூசித் திட்டத்தின்கீழ் இவ்வாண்டில் மூத்த குடிமக்களுக்கு இலவசமாக இன்புளூவென்சா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கடந்தாண்டில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஸூல்கிப்ளி அமாட் அறிவித்திருந்தார்.மலேசியாவில் இன்புளூவென்சா காய்ச்சலினால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகப் பதிவாகவில்லை. அதே வேளையில், பறவைக் காய்ச்சலும் மனிதர்களுக்குப் பரவியிருப்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *